தற்குக் காரணமான மற்றோர்
ஐயத்தையும் தீர்த்துக் கோடற்கு எண்ணி வினவினன்
என்க. (39)
உதயணன் முனிவரை மற்றொன்று வினவுதல்
342. மதக்க ளிற்றின்மேன் மன்னிய வன்பெனக்
குதவக் காரண மென்னெனக் கூறலும்
சிதைவில் காட்சிநற் சீரொழுக் கத்தவர்
மதமின் மாட்சியர் மன்னநீ கேளென்றார்.
(இ - ள்.) “பெரியீர்!
அக்களிற்றின் வரலாறன்னதாகுக!; எனக்கு அம்
மதகளிற்றின் மேல் நிலைபெற்ற அன்பு
வருதற்கியன்ற காரணந்தான் என்னையோ? என்று அம்
மன்னவன் வினவுதலும் குற்றமற்ற நன் ஞானத்தையும்
சிறப்புடைய நல்லொழுக்கத்தையும் தன்முனைப்பற்ற
மாண்பினையும் உடையவராகிய அம் மாமுனிவர் “அரசே
கேள்!” என்று கூறலானார் என்க. (40)
முனிவர் கூற்று
343. உள்ள நற்றவ ருற்றுரை செய்கின்றார்
கள்ள விழ்பொழிற் கார்முகில் சூடியே
வெள்ளி யம்மலை மேல்வட சேடியில்
வள்ளலார் பொய்கை மத்திம நாட்டினுள்.
(இ - ள்.) நெஞ்சம் நல்ல தவத்தாலே
நிரம்பிய அம்முனிவர் அவ் வினாவைச் செவியேற்று
அதற்கு விடை கூறுகின்றவர், “வேந்தனே!
தேன்றுளிக்கும் மலர்ப் பொழில்கள் மிக்கதும்
கரிய முகில்களைச் சூடிக் கொண்டிருப்பதும் ஆகிய
வெள்ளிமலையின் மேல் வடசேடியின்கண் வள்ளன்மை
பொருந்திய பொய்கைகள் மிகுந்த நடுநாட்டின்கண்”
என்றார் என்க. (41)
இதுவுமது
344. சுகந்தி யூர்க்கிறை சொற்புகழ் மாதவன்
அகந்தெ ளிந்த வயந்தன் மனைவியாம்
செகந் தனிப்புகழ் சீரார்கு லாங்கனை
உகந்து பெற்றன ளோர்புகழ்க் கோமுகன்.
(இ - ள்.) சுகந்தி என்னும் ஊர்க்கு
அரசனும், புலவர் சொல்லாலே புகழ்தற்கியன்ற
பெரிய தவத்தையுடையவனும், உள்ளந் தெளிந்தவனும்
ஆகிய வயந்தன் என்பவன் மனைவியும் உலகமே
சிறப்பாகப் புகழ்தற்குரிய சீர்மை பொருந்திய
குலாங்கனை
|