யூகியின் கோட்பாடு
66. தேறி னனெ ழுந்திருந்து தீயர் கள்ள யானையை
மாறு தரக் காட்டியெம் மன்ன னைப்பி டித்தனர்
வீறு தர வந்நகரை வெங்க யத்த ழித்துப்பின்
கூறு மன்ம களுடன் கொற்ற வனை மீட்குவம்.
(இ - ள்.) நிலத்திலே வீழ்ந்த யூகி
ஒருவாறு தெளிந்து எழுந்திருந்து எம்மரசனைப்
பொய்யானையைத் தேவயானைபோல மாறுபடக் காட்டிப்
புல்லர்கள் சிறைப்பிடித்தனர். நன்று! நன்று!
யாமோ எமக்குப் பெருமையுண்டாகும்படி அப்பகை மன்னனுடைய
உஞ்சை நகரத்தை வாய்மையான யானையாலேயே அழித்துப்
பின்னரும் அவ்வோலையிற் கூறப்பட்ட அப்பிரச்சோதன
மன்னனுடைய மகளாகிய வாசவதத்தையையும் சிறைப்பிடிபிப்த்து
எம்மரசனையும் மீட்கக் கடவேம் என்றும் என்க. (62)
67. மீள்கு வம்யா ருமென் றெணி
வெகுண்டு போர்க்க ளத்தினில்
வாண்மு னைக டந்தவர்க்கு
வஞ்ச னைசெய் வோமென
நீள்வி ழிநன் மாதரோடு
நின்ற சுற்றத் தோர்களைக்
கோள் களைந்து புட்பகத்திற்
கொண்டு வந்து வைத்தனன்.
(இ - ள்.) எம்மரசன் மீண்டபின்னர்
யாமும் மீளக்கடவேம் என்றும், சினந்து போர்க்களத்தினில்
வாட்போரில் வஞ்சனை செய்து வென்ற அப்பகைவர்க்கு
யாமும் வஞ்சனை செய்தே வெல்வோமென்றும் தன்னுட்
கருதி நெடிய கண்களையுடைய தன் மனைவிமாரோடும் ஆங்கிருந்த
சுற்றத்தார்களையெல்லாம் அவரவர் கொள்கைகளை
மாற்றிப் புட்பக நகரத்திற்கு அழைத்து வந்து ஆங்கு
இருப்பித்தான் என்க. (63)
68. உருமண் ணுவா வினுட
னிடப கன்ச யந்தியும்
திருநி றைந்த புட்பகமுஞ்
சேர்ந்தி னிதி ருக்கவென்
பெரும கன்க ணிகை மைந்தர்
பிங்க லக டகரை
அரசு நாட்டி யாள்கவென்றே
யன்பு டன்கொ டுத்தனன்.
|