ஊறு - மாறுறு கருமம் என்பதனானும், செறிப்பு
- செறியப்பண்ணும் என்பதனானும், உதிர்ப்பு - உதிர்ப்பை
ஆக்கும் என்பதனானும் பெற்றாம். ஊறாவது - வினைகள்
உயிருடன் சேரவரும் வாயில். செறிப்பு - அவ்வினை
வருவாயைத் தடுப்பது, உதிர்ப்பு - உயிருடன் முன்னமே
சேர்ந்து பிணித்துள்ள வினைகளைச் சிறிது சிறிதாகத்
தேய்ப்பது. இவ்வுதிர்ப்பே வீடு பேற்றிற்கு இன்றியமையாக்
கருவியாகலின் இதன் தன்மை விளம்புதற்பாலதாமோ
என்றார். (4)
நூல்
நாட்டுச் சிறப்பு
5. இஞ்சிமூன் றுடைய கோமா
னெழில்வீர நாத னிந்தப்
புஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம்
பொற்புநல் லறநன் மாரி
விஞ்சவே சொரியுங் காலம்
வெண்மதிக் குடைக்கீழ் வாழும்
எஞ்சலில் காட்சி மன்ன
னிருக்கைநா டுரைத்து மன்றே.
(இ - ள்.) மூன்று மதில்களையுடைய நம்
கோமானாகிய அழகிய வீரநாதர் என்னும் ?சீ
வர்த்தமானர்? குறிஞ்சி முதலிய வாகத் தொகுப்புற்ற
இந்த நிலவுலகத்து மக்கட்கெல்லாம் பொலிவுடைய நல்லறமாகிய
நல்ல சொன்மழையை மிகுதியாகப் பொழிந்து
அவரையெல்லாம் உய்யக் கொண்டருளிய காலத்திலே
வெள்ளிய திங்கள் மண்டிலம் போன்ற குடைநீழலிருந்து
அம்மக்களை இனிது பாதுகாத்துவந்த குறைவற்ற மெய்க்காட்சியையுடைய
(சதானிகன் என்னும்) அரசன் ஆட்சி செய்தருளிய நாட்டின்
சிறப்பினை இனிக் கூறுவேம் கேண்மின் என்பதாம்.
இஞ்சி மூன்று-மூன்று மதில். அவை உதயதரம்,
பிரீதிதரம், கல்யாணதரம் என்பன. வீரநாதர் - சீவர்த்தமானர்
என்னும் 24 ஆம் தீர்த்தங்கரர். புஞ்சம் - தொகுதி.
(1)
நாவலந்தீவு
6. பூவுநற் றளிருஞ் செற்றிப்
பொழின்மிகச் சூழ்ந்தி லங்கும்
நாவலா மரத்தி னாலே
நாமமாய்த் துலங்கி நின்று
தீவுநற் கடல்க டாமு
மொன்றிற்கொன் றிரட்டி சூழ்ந்த
நாவலந் தீவு நந்தி
னன்மணி போன்ற தன்றே.
|