பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்47


தாமும் அவ்விசை கேட்டு, வியந்து வந்து அவ்வவையினரோடிருந்து மகிழவும் பறவைகள் அவ்வின்னிசையான் மயங்கிப்பசும் பொன்னா லியன்ற அவ்வரங்கின்கண் வீழாநிற்பவும் இசையைக் குறுக்கியும் நீட்டியும் இசையிலக்கண முறைமையாலே பாடியபொழுது மதநீர் துளித்தலொழியாத களிற்றினையுடைய அப்பிரச்சோதன மன்னன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். மகளிரெல்லாம் அவ்வின்னிசையாலே பெரிதும் மயங்குவாராயினர் என்க. (102)

பிரச்சோதனன் உதயணனை வத்தவ நாட்டிற்குப் போக்கத் துணிதல்

107. வத்தவன் கையைப் பற்றி மன்னவ னினிது கூறி
வத்தவ னோலை தன்னுள் வளமையிற் புள்ளி யிட்டும்
வத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன
வத்தவநாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார்.

(இ - ள்.) இவ்வாறு பெரிதும் மகிழ்ந்த பிரச்சோதனன் எழுந்துவந்து உதயணன் கைகளைப் பற்றிக் கொண்டு இனியமுகமன் மொழிந்து அவ்வுதயணன் செலுத்தற்குரிய திறைப் பொருளைக் கணக்கோலையில் வரவு வைத்துக் கொண்டு அவ்வுதயணனை நோக்கி “பெருந்தகாய்! இனி நீ நினது வத்தநாடெய்துதற்குப் புறப்படுதி!” என்று பணிப்ப, மறையுணர்ந்த அந்தணரும் உதயண மன்னனே நீ புறப்படுதற்குரிய நன்னாளும் நாளையே ஆகும் என்று கூறி நல்ல முழுத்தத்தையும் குறிப்பிட்டனர் என்க. (103)

பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்

108. ஓரிரண் டாயி ரங்க ளோடைதாழ் மத்த யானை
ஈரிரண் டாயி ரங்க ளெழின்மணிப் பொன்னின் றேரும்
போரியல் புரவி மானம் பொருவிலை யாயி ரம்மும்
வீரர்க ளிலக்கம் பேரும் வீறுநற் குமரற் கீந்தான்.

(இ - ள்.) பிரச்சோதன மன்னன் வீறுடைய உதயணகுமரனுக்குப் பரிசிலாக இரண்டாயிரம் பொன்முகபடாம் அணிந்த மத யானைகளும் நாலாயிரம் அழகிய மணிகளையுடைய தேர்களும் ஐயாயிரம் எண்ணளவுடைய ஒப்பற்ற போர்ப் பயிற்சியுடைய குதிரைகளும் நூறாயிரம் காலாண் மறவரும் வழங்கினான் என்க. (104)

யூகி குறத்தி வேடம் புனைந்து குறி சொல்லல்

109. யூகியும் வஞ்சந் தன்னை

யுற்றுச்சூள் வழாமை நோக்கி

வாகுடன் குறத்தி வேடம்

வகுத்தனன் குறிகள் கூற்றாம்