இதுவுமது
113. நலமிகு புகழார் மன்ன
நாலிரு நூற்று வில்லு
நிலமிகக் கடந்த தென்ன
நீர்மையிற் றந்ததெய்வம்
நலமிகத் தருமின் றென்ன
பண்ணுகை நம்மா லென்னக்
குலமிகு குமரன் செல்லக்
குஞ்சர மசைந்த தன்றே.
(இ - ள்.) யானை நிற்றலும்
வயந்தகன் நன்மை மிக்க புகழுடைய பெருமானே! யாழ்
வீழ்ந்த இடத்தினின்றும் எண்ணூறு விற்கிடைத்
தொலை நிலம் கடந்துவிட்டது என்று கூற, அது கேட்ட
குலச் சிறப்பு மிக்க உதயண குமரன் பண்போடு முன்னர்
அந்த யாழைத் தந்த தெய்வந்தானே நம் நலம்
மிகும்படி இன்னுந் தருவதாம்; தெய்வத்தாலன்றி
யாம் என் செய்யக் கடவேம் காண்! என்று கூறி,
மீண்டும் ஊர்ந்து செல்ல அப்பிடியானை இளைப்புற்றது
என்க. (109)
பிடி வீழ்ந்திறத்தல்
114. அசைந்தநற் பிடியைக் கண்டே
யசலித மனத்த ராகி
இசைந்தவரிழிந்த பின்னை
யிருநில மீதில் வீழத்
தசைந்தகை யுதிரம் பாயச்
சாலமந் திரமங் காதில்
இசைந்தவர் சொல்லக் கேட்டே
யின்புறத் தேவா யிற்றே.
(இ - ள்.) இளைப்புற்று நடுங்கிய
யானையின் நிலைமை கண்டு உதயணன் முதலியோர்
கையறவு கொண்ட நெஞ்சினையுடையவராகி அதன்
மீதிருந்து இறங்கிய பின்பு அப்பிடியானை பெரிய
நிலத்திலே வீழ அதன் தசைமிக்க கையினின்றுங்
குருகி சொரிய அது கண்ட உதயணன் முதலியோர்
அப்பிடியின் செவிமருங்கிற் சென்று ஐந்தெழுத்து
மந்திரத்தைப் பன்முறையும் ஓத அப்பிடியும்
இன்பமாகக் கேட்டு இறந்து தெய்வப்
பிறப்பெய்திற்று என்க. (110)
|