பக்கம் எண் :

60உதயணகுமார காவியம் [ இலாவாண காண்டம்]


(இ - ள்.) அம்முனிவன் “பெருமகனே! நீ இழந்த கோமுடி சூடுதற்கு முதலாகவுள்ள அரசுரிமையோடு வெறுப்பின்றி நின் துணையாகிய யூகியையும் முன்னை வடிவத்துடன் பெறுவாய் என்று கூற உதயணகுமரன் அம்முனிவன் மொழியை ஐயுறாது தெளிந்து மீள்பவன் மணங்கமழும் அம்மலைச் சாரலில் ஒரு பூம்பொழிலே கண்ட சிறந்த துறவியின் மகளாகிய உடுக்கை போன்ற இடையையுடைய விரிசிகை என்னும் ஒரு பேதைப் பருவத்தாள் வேண்டுகோட்கிணங்கி மலர்மாலை புனைந்துசூட்டி விடுத்தனன் என்க. (14)

உதயணனன் தழைகொணரப் போதல்

135. கலந்தன னிருந்தபின் கானகத் தழைதர
நலந்திகழ்நன் மாதர்செப்ப நரபதியும் போயினன்
கலந்திகழும் யூகியுங் காவலன் றன் றேவியைச்
சிலதினம் பிரிவிக்கச் சிந்தைகூரத் தோன்றினான்.

(இ - ள்.) விரிசிகைக்கு மாலை சூட்டிய உதயணகுமரன் மீண்டு வந்து வாசவதத்தையோடு கூடி இலாவாண நகரத்தினிதிருந்தனர். ஒருநாள் அழகு திகழ்கின்ற கற்புநலமிக்க அவ்வாசவதத்தை வேண்டிக் கோடலால் உதயண வேந்தன் அவட்கு நற்றளிர் கொணரக் கானகத்திற்குச் சென்றனனாக, அச்செவ்வியறிந்த அணிகலன் திகழுகின்ற யூகிதானும் தான் ஆராய்ந்து துணிந்தபடி உதயணன் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையை ஒருசில நாள்கள் அவனிடத்திலிருந்து பிரிவித்தற்கு எண்ணமிக்கு இலாவாண நகர் வந்து தோன்றினான் என்க. (15)

யூகியின் செயல்

136. மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாந்தரைத்
துன்னுநன் கிருவரைத் தொக்குட னிருக்கவென்று
மன்னன்மனை தன்மனைக்கு மாநிலச் சுருங்கைசெய்
தன்னவன் மனைமுழுது மறைந்தவர் தீயிட்டனர்.

(இ - ள்.) உதயணமன்னன் அரண்மனையிலே தன்னேவலாலே கரந்திருக்கும் மாந்தருள்ளிருந்த இருவரைத் தன்னுடன் கூடியிருக்க வென்று கூறி அவர்களைக் கொண்டு உதயணன் தேவியாகிய வாசவதத்தை யுறைகின்ற உவளக மாளிகையினின்றும் ஒரு சுருங்கை வழியுண்டாக்கிய பின் அந்த மாளிகை முழுவதினும் (யூகி கூறியபடி) அங்குக் கரந்திருந்த ஏனையோர் தீக்கொளுவினர் என்க. (16)