பக்கம் எண் :

64உதயணகுமார காவியம் [ இலாவாண காண்டம்]


இதுவுமது

144. நங்கைநறுங் கொங்கையே நல்லமைக் குழலியெம்
கொங்குலவு கோதைபொன் குழையிலங்கு நன்முகம்
சிங்கார முனதுரையும் செல்வி சீதளம்மதி
பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன்.

(இ - ள்.) நங்கையே! நறிய கொங்கையுடையாளே! அழகிய கரிய மை போன்ற கூந்தலையுடையோய!் எமக்கு மணங்கமழும் மலர்மாலை போல்வாளே! பொற்குழை விளங்கும் அழகிய நின் முகமும் மொழியும் காமச்சுவைப் பிழம்புகளல்லவோ? செல்வீ! நினது அழகிய முகந்தான் குளிர்நிலவு பொங்குதல் ஆர்ந்த திங்கள் மண்டிலமன்றோ? என்று பற்பல கூறி உதயணவேந்தன் அழுவான் என்க. (24)

இதுவுமது

145. வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவிநீ
நாணின்பாவை தானுநீ நலந்திகழ் மணியுநீ
காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ
தோணிமுகங் காட்டெனச் சொல்லியே புலம்புவான்.

(இ - ள்.) பின்னும் நீ யாழ்வித்தைக் குறைவிடமானவள!;் நீ கலையுருவமானவள்!; நீ நாண் என்னும் பண்பாலியன்ற பாவை போல்வாள், அழகு திகழ்கின்ற மாணிக்கமும் நீயே! காரிகையே நீ அளியேன் முன்னர்த் தோன்றி நின்னுடைய முகத்தைக் காட்டி உய்யக் கொள்க! என்று சொல்லி அழுதான் என்க. (25)

அமைச்சர் தேற்றுதல்

146. துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா
அன்புமிக் கரற்றுவதை யகல்வது பொருளென
நன்புறு மமைச்சர்சொல்ல நரபதியுங் கேட்டனன்
இன்புறும் மனைவிகாத லியல்புட னகன்றனன்.

(இ - ள்.) வாசவதத்தையின் பிரிவினாலே துன்பம் பெருகுதலாலே இவ்வாறு புகழ்தற்கரிய அத்தேவியை நினைந்து காதல்மிக்கு இங்ஙனம் அழுவது நின்போலும் மெய்யுணர்வுடையார்க் கழகன்று. ஆதலால் அழாதே! என்று நன்மையுடைய அமைச்சர்கள் பலவும் கூறித் தெளிவித்தலாலே அவர் கூறியவாறு உதயண மன்னனும் தேறி ஒருவாறு அழுகை தவிர்ந்து இன்புறுதற்குக் காரணமான அத்தேவியின்பால் நீங்காத காதற் பண்புடையனா யிருந்தனன் என்க. (26)