தருசக ராசன் கேட்டுத்
தளரவப் புறத்த கற்ற
உருமண்ணு வாம னத்தி
லுபாயத்தி லுடைப்ப னென்றான்.
(இ - ள்.) அம்மன்னரெழுவரும் பண்டு
தருசகமன்னனுக்குத் தாமளந்த திறைப்பொருளை இனி
அளப்பதில்லை என்று துணிந்த வராய்த் தீயெனச்
சினந்து வந்து வாழ்வோர்க்கினிய அம்மகத
நாட்டினை அழிக்கத் தொடங்கினர். இவர்தம்
செயலை ஒற்றராலுணர்ந்து தருசகமன்னன் மனந்தளர,
அஃதறிந்த உருமண்ணுவா அப்பகைவர்களை
அந்நாட்டினின்று துரத்தற்குக் கருதித் தன்
மனத்திலாராய்ந்து ஒரு பாயத்தால் அவர்களை
உடைந்தோடச் செய்வேன் என்று எண்ணினான் என்க.
(15)
உருமண்ணுவாவின் சூழ்வினை
166. கள்ளநல் லுருவி னோடுங் கடியகத் துள்ளே யுற்ற
வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவி னோடு
தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப் போந்து
பள்ளிப்பா சறைபு குந்து பலமணி விற்றி
ருந்தார்.
(இ - ள்.) கள்ள வேடம் புனைந்து
காவலுடைய கன்னி மாடத்திலிருந்த வள்ளலாகிய
உதயணமன்னனையும் ஒரு சூழ்ச்சியினாலே தம்மொடு
கூட்டிக் கொண்டு உருமண்ணுவா முதலியோர்
மணிவணிகராக வேடந்தாங்கி ஆராய்ந்தெடுத்த
மணிகளைக் கொண்டு அவற்றுள் சில மணிகளை
விற்றற்கு அப்பகையரசர் பாசறையிற் புகுந்து
அங்குப் பல்வேறு மணிகளையும் விலைசொல்லி
விற்பாராயினர் என்க. (16)
கலிவிருத்தம்
167. மன்னன் வீர மகதற்குக் கேளாத்தம்
இன்னு ரைக ளியல்பின் வரவரத்
துன்னு நாற்படை வீடுதோன் றிரவிடை
உன்னி னர்கரந் துரைகள் பலவிதம்.
(இ - ள்.) பகற்பொழுதிலே
மணிவணிகராய் மணிவிலைகூறி வீற்றிருந்த
உருமண்ணுவா முதலியோர் இரவுவந்துறவுற வீரமுடைய மகத
மன்னனுக்குத் தாம் கேண்மையுடையோர் போல இனிய
மொழிகள் பலவற்றை அப்பகைவருடைய நான்கு வகைப்
படையும் பாசறைக்குள் வந்து சேருந்தோறும்
அம்மறவர் ஐயுறும் படி பல்வேறு கரவு மொழிகளை
நினைந்து அவர் ஐயுறும்படி பல்வேறு வகையிற்
பேசலாயினர் என்க. (17)
|