பதுமாபதி உதயணனிடம் யாழ் பயில
விரும்புதல்
190. மதுமலர்க் குழலி விண்மின்
மாலைவேல் விழிமென் றோளி
பதுமைவந் தரசற் கண்டு
பன்னுரை யினிது கூறும்
மதியின்வா சவதத் தைதன்
வண்கையி னதனைப் போல
விதியினான் வீணை கற்க
வேந்தநீ யருள்க வென்றாள்.
(இ - ள்.) தேன் கெழுமிய
கூந்தலையுடையவளும் விண்ணின் மின்னற் கொடி
போன்றவளும் வெற்றிமாலை யணிந்த வேல்போன்ற
விழிகளையுடையவளும் மென்மையான
தோள்களையுடையவளுமாகிய பதுமாபதி ஒரு நாள்
உதயணன்பாற் செவ்விதேர்ந்து வந்து கண்டு
இனிதாகப் பேசுகின்ற சில மொழிகளைக் கூறுவாள் ; --
“பெருமானே! அறிவுடைமையாலே மிக்க வாசவதத்தை தன்
கையிலுள்ள யாழினை வாசிக்குமாறு போல யானும்
வாசித்தற்கு இசை நூல் விதிப்படி யானும் நின்பால்
யாழ்வித்தை பயில்வதற்குத் திருவருள் செய்தல்
வேண்டும் என்று வேண்டினள் என்க. (5)
உதயணன் வாசவதத்தையை நினைந்து
வருந்தித் துயில்தலும்
கனவு காண்டலும்
191. பொள்ளென வெகுண்டு நோக்கிப்
பொருமனத் துருகி மன்னன்
ஒள்ளிதழ்த் தத்தை தன்னை
யுள்ளியே துயிலல் செய்ய
வெள்ளையே றிருந்த வெண்டா
மரையினைக் கொண்டு வந்து
கள்ளவிழ் மாலைத் தெய்வங்
கனவிடைக் கொடுப்பக் கண்டான்,
(இ - ள்.) பதுமாபதி, வாசவதத்தை
போல என்று தன்னை வாசவதத்தைக்கு ஒப்பாகக் கூறிய
சொல் தன் செவிசுட உதயண மன்னன் அப்பதுமாபதியை
ஞெரேலெனச் சினந்து பழைய நினைவுகளாலேயே
தன்னுள்ளே போர் நிகழ்த்தப் பெறுகின்ற
மனத்தாலே அவ்வாசவதத்தையை நினைந்து உருகி
ஒள்ளிய மலர்சூடிய அவ்வாசவதத்தையையே நினைத்து
அரிதின் துயிலா நிற்புழித் தான் கண்டதொரு
கனவின்கண் தேன் துளிக்கும்
|