பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்9


அத்தேவி இனிய துயில் கலைந்து விழித்தெழுந்தாள்; (ஊனைத் தின்பதன்றி) உயிரைக் கொன்று தின்னாத நல்லியல்புடைய அப்பறவை தானும் அவட்குயிருண்மை கண்டு வாளா வானத்தே பறந்தோடிப் போயிற்றென்க. (10)

அரசி கருவுயிர்த்தல்

15. நிறைமதி முகநன் மங்கை

நிரம்பிய கெர்ப்ப மாதல்

பொறைவயி னோய்மீக் கூரப்

பொருவில்வான் கோள்க ளெல்லாம்

முறையினல் வழியை நோக்க

மொய்ம்பனத் தினத்திற் றோன்ற

அறையலை கடலிற் சங்க

மாணிமுத் தீன்ற தொத்தாள்.

(இ - ள்.) நிறை வெண்டிங்கள் போன்ற அழகிய முகத்தையுடைய அம்மிருகாபதி நிரம்பிய கருவுடையளாதலாலே, அக்கருப் பொறையாலே வருத்தம் மிகாநிற்பவும். ஒப்பற்ற வானத்து ஞாயிறு முதலிய கோள்களெல்லாம் முறைப்படி நன்னெறியை நோக்காநிற்பவும் வலிமை மிக்க ஆண்மகன் அந்நல்ல முழுத்தத்திலேயே பிறந்தானாக, அவ்வரசி தானும் ஒலிக்கின்ற அலையையுடைய கடலின்கண் வலம்புரிச் சங்கமொன்று ஆணி முத்தினை ஈன்றதனை ஒத்து விளங்கினள் என்க. (11)

16. பொருகயற் கண்ணி னாடான்

போந்ததை யறிந்த ழுங்கித்

திருமணி கிடந்த தென்னச்

செழுமகன் கிடப்பக் கண்டு

பெருகிய காத லாலே

பெருந்துயர் தீர்ந்தி ருப்ப

மருவுநற் றாதை யான

மாமுனி கண்டு வந்தான்.

(இ - ள்.) ஒன்றனோடொன்று போரிடுகின்ற இரண்டு கயல்மீன்களை ஒத்த கண்களையுடைய அவ்வரசி, தான் பறவையாற் பற்றப் பட்டுக் காட்டினூடே வந்திருப்பதனை அறிந்து அந்நிலைமைக்குப் பெரிதும் துயருற்றுத் தன்பக்கத்தே அழகிய மாணிக்கம் ஒன்று கிடப்பது போலத் தன்னருமந்த மகன் கிடப்பதனையும் கண்டு தன் னெஞ்சிலே பெருகிய அன்பு காரணமாகத் தனக் கெய்தியுள்ள