பக்கம் எண் :

பக்கம் : 1143
 

     - இனிய நகைப்புடன் கூடிய மழலைச் சொற்களைச் செவிமடுத்து, இனிதினின் இருந்து
- இனிதாக மகிழ்ந்து நெடிது நாளிருந்து, பின்னர் - பிறகு, பன்னும் மெய்த்துறவில் புக்கான்
- மெய்ந் நூல்களால் ஆராய்ந்து கூறப்பட்ட மெய்யுணர்தற்குக் காரணமான துறவு நெறியிலே
செல்வானாயினான், அன்னதன் பகுதி தன்னை - அவ் வரலாற்றின் பகுதியை, அறியுமா
பகர்தலுற்றேன் - யான் அறிந்த துணையானே கூறத் தொடங்குகின்றேன், (எ - று.)

     நிலைபெற்ற புகழ் உடையான் என்றதனால் பயாபதி இல்லறத்தின் பயன் முழுதும்
பெற்றவன் என்றாராயிற்று. என்னை? இல்லறத்தின் பயன் புகழும் துறவறத்தின் பயன்
வீடுபேறும் என்பவாகலின். மகன் வழிச் சிறுவர் வாயில் இன்னகை மழலை
கேட்டென்றதனால், காமஞ்சான்ற கடைக்கோட் காலையை அடைந்தான் என்றாராயிற்று.
பின்னர்ச் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல்காப்பியம்) என நூல் பன்னு மாகலின் பன்னும் மெய்த்துறவென்றார். மன்னர் மன்னன் - என்றார், அரிய துறவு என்றுணர்த்தற்கு.

     பயாபதி துறவிற் புக்க பகுதியை இனிக் கூறப்புகுந்தேன் எனத் தேவர் நுதலிப்புக்கார் என்க.

(710)

 
பயாபதியின்பால் பெயரர்கள் எய்துதல்
1841. திருமகி ழலங்கன் மார்பிற்
     செங்கணான் வணங்கச் செல்வப்
பெருமகிழ் வெய்தி வேந்தன்
     பிரசாபதி பெரிய வாட்கண்
உரிமையொ டிருந்த போழ்தி
     னொலிகல னொலிப்ப வோடி
அருமைகொ டிகிரி யாள்வான்
     சிறுவர்சென் றணுகி னாரே.
 
      (இ - ள்.) திருமகிழ் அலங்கல் மார்பன் - திருமகள் மகிழ்ந்து வதிகின்ற
மாலையணிந்த மார்பினையுடைய, செங்கணான் - சிவந்த கண்களையுடைய திவிட்ட மன்னன
வணங்க - தன் அடிகளிலே வணங்கா நிற்ப, செல்வப்பெருமகிழ்வு எய்தி - செல்வமுடைமை
காரணமாகப் பெரியதொரு மகிழ்ச்சியையடைந்து, வேந்தன் பிரசாபதி - பயாபதி மன்னன்,
பெரிய வாட்கண் உரிமையொடு இருந்தபோழ்தின் - பெரிய வாள் போலும் கண்களுடைய
உரிமைத் தேவியோடு வீற்றிருந்த அமையத்தே, அருமைகொள் திகிரியாள்வோன் -
பெறற்கரிய ஆழிப்படையை யுடைய திவிட்டனுடைய, சிறுவர் - இளமகார்கள், ஒலிகலன்
ஒலிப்ப வோடி சென்று - கிண்கிணி முதலிய ஒலிக்கும் அணிகலன்கள் ஆரவாரிக்கும்படி
ஓடிப் போய், அணுகினாரே - அப்பயாபதி வேந்தனை அடைந்தனர். (எ - று.)