பக்கம் எண் :


1

                    அரிச்சந்திர புராணம்
                      மூலமும் உரையும்

 
பாயிரம்
 


பிள்ளையார் வணக்கம்

எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்


1. பெரும்புகழ் பெறும்படி அருந்துயர் கெடும்படி
   பிர்யம்பல வரும்ப டிஉளம்
விரும்பிய தனம்பெற மிகும்பெறு பதம்பெற
   விளங்கிய தவம்செ யநெடும்
கரும்பவல் பெரும்பய றருங்கனி ரசங்கொடு
   கவர்ந்ததென் உவந்த ருள்புரிந்
திருங்கரி முகன்சிறு சதங்கையொ டுகிண்கிணி
   இலங்கிய பதம்பெ றுவனே.

     (இதன் பொருள்) பெரும் புகழ் பெறும்படி - (உலகில்) பெரும்
புகழ் பெறவும், அருந்துயர் கெடும்படி - நீக்குதற்கு அரிய துன்பம்
நீங்கவும், பிர்யம் பல வரும்படி - பல விருப்பங்களும் நிறைவேறவும்,
உளம் விரும்பிய தனம் பெற - மனம் விரும்பிய அளவு பெருஞ் செல்வம்
பெறவும், மிகும் பெறு பதம் பெற - அடையத்தக்க மேலான பதமுத்திகள்
அடையவும், விளங்கிய தவம் செய - வீட்டிற்கேதுவான மெய்த்தவங்கள்
செய்யவும், நெடுங் கரும்பு அவல் பெரும்பயறு அருங்கனி ரசங்கொடு
கவர்ந்தது என் - நான் படைத்த பெரும்பயறு, அவல், கருப்பஞ்சாறு,
பழச்சாறு இவைகளின் இன்சுவை போன்ற இனிமையை நான் பெறும்படி,
உவந்து அருள் புரிந்து - என்னிடத்தில் மகிழ்ச்சியோடு எழுந்தருளிவந்து
அருள் புரிதலால், இருங் கரி முகன் சிறு சதங்கையொடு கிண்கிணி
இலங்கிய பதம் பெறுவன் - பெரிய யானைமுகக் கடவுளின் சிறு
சதங்கையும் பாதச்சிலம்பும் அணிந்த திருவடிகளைப் பெறுவேன்.     

     ஏகாரம் :
தேற்றம். புரிந்து : காரணப்பொருட்டாய வினையெச்சம்.
இன்சுவைப் பொருள்களை இறைவனுக்கு அளித்து இம்மைப் பயனும்
மறுமைப்பயனும் வீடுபேறும் உதவுகின்ற திருவடிகளைப் பெறுதலால் இதில்
அமைந்த அணி (பரிவர்த்தனை) பண்டமாற்று அணி.

                                                          (1)