பக்கம் எண் :


216

ஆகிய விளையாடல்களை, கூர் உகிர்க் கை சிவப்ப ஆடுவ -
கூர்மையான நகங்களையுடைய கைகள் சிவக்கும்படி ஆடுவது, கொத்து
மாமுடி உற்ற பொன் மேருவில் பலகால் விழுந்து எழும் மீன் இனத்தை
நிகர்க்கும் - கூட்டமாகிய பெரிய சிகரங்களைப் பொருந்திய பொன்
மயமாகிய மாமேரு மலையின் பலமுறை விழுந்து எழுகின்ற
நட்சத்திரங்களை ஒத்திருக்கும்.

     உவமையணி; மாமுடி : உரிச்சொற்றொடர் ; குழல் கார் : குழலாகிய
கார் ; உருவகம். அடிமலர் என்பது போலி. மேன் மாடம் இமயமலையைப்
போன்றிருந்தது எனவும், அம் மாடத்தின்மே லெழுந்துவந்து விழும்
கழங்கும், அம்மனை, பந்துகள் விண்மீன்கள் விழுந்துபின் எழுவன போலத் தோன்றின என்பது.
                                                    (12)

 
  அரம்பையர் ஆடல் பட லொலி   
424. துடிநு டங்கிடை மாதர் கைபுனை
   தொடிமு ழங்கிட மாடமேல்
அடிநு டங்கிட நடுநு டங்கிட
   நுனிநு டங்கிட அம்பொனின்
கொடிநு டங்குவ கடையு கத்தெழு
   குரைக டற்றொனி அன்றிஅவ்
விடிநு டங்குவ தென்னின் மற்றினி
   யாவ தேநிக ராவதே.

     (இ - ள்.) துடி நுடங்கு இடை மாதர் - உடுக்குப்போன்ற
துவள்கின்ற இடைகளையுடைய பெண்கள், கை புனை தொடி முழங்கிடும்
மாடமேல் - கைகளில் அணிந்திருக்கிற வளையல்கள் ஒலிக்கும்படி
உப்பரிகைகளின்மேல், அடி நுடங்கிட - காற்சிலம்பு ஒலிக்கவும், நடு
நுடங்கிட - அரையிலணிந்துள்ள மேகலை ஒலிக்கவும், நுனி நுடங்கிட -
மார்பு அணிகள் ஒலிக்கவும், அம் பொனின் கொடி நுடங்குவ - அழகிய
பொன்மயமான கொடி போன்ற பெண்கள் நடனமாடுவது, கடை உகத்து
எழு குரை கடல் தொனி - ஊழிக்கால முடிவில் எழுகின்ற
ஆரவாரிக்கின்ற கடல் முழக்கம், அ இடி நுடங்குவ என்னின் அன்றி -
அந்த யுகமுடிவில் இடி முழக்கமும் போன்றிருந்தது என்று
கூறுவதல்லாமல், இனி யாவதே நிகராவது - வேறு எதுதான் அதற்கு
ஒப்பாவது என்று சொல்வது.

     துடி இடை : உவமத்தொகை. நுடங்குஇடை : வினைத்தொகை ; அடி
நடு நுனி : இட ஆகுபெயர்கள் ; பொனின் : தொகுத்தல் : பொனின்
கொடி : அன்மொழித்தொகை ; கடையுகம் : இலக்கணப் போலி ; யா :
வினாப்பெயர் இன்மை குறித்துநின்றது ; மற்று : அசை.

     ஏகாரம் : ஈற்றசை. அன்றி : வினையெச்சம். இடியும் : உயர்வு
சிறப்பும்மைதொக்கது. யுகமுடிவில் எழுங்கடல் ஒலியும் இடி யொலியும்
மிகப் பெருகிய ஒலியாதலின் இவற்றையன்றிக் கூறுவதற்குவேறு
உவமையில்லை என்ற கருத்தினால் 'யாவதே நிகராவதே' என்றார்.
                                                    (13)