பக்கம் எண் :


234

     'வசிட்டன்மேற் கொண்ட பொறாமையாற் கூறிவிட்டோமே! இதனை
மெய்யாக்கிக் காட்டுவது அரிய செயலன்றோ? எவ்வாறு முடிப்பது' என்று
ஆய்ந்தான் கோசிகன் என்பது.
                                                     (2)

  விசுவாமித்திரரைப் பார்க்க எண்ணிறந்த
     
     முனிவர் வரல்   
461. விண்ணி ழிந்து விரிமலர்ச் சோலையின்
கண்ணி ருந்த கவுசிகற் காண்டுமென்
றெண்ணி கந்த முனிவர்வந் தீண்டுபு
மண்ணில் வீழ்ந்து வணங்கி இருந்தனர்.

     (இ - ள்.) விண் இழிந்து வரி மலர்ச் சோலையின்கண் இருந்த -
விண்ணுலகு விட்டு இறங்கி அலர்ந்த மலர்கள் நிறைந்த சோலையில்
அமர்ந்திருந்த, கவுசிகன் காண்டு என்று - விசுவாமித்திரரைப் பார்ப்போம்
என்று, எண் இகந்த முனிவர் வந்து ஈண்டுபு - அளவற்ற முனிவர்கள்
வந்து கூடி, மண்ணில் வீழ்ந்து வணங்கி இருந்தனர் - பூமியில் விழுந்து
வணங்கி இருந்தார்கள்.

     விரி மலர் : வினைத்தொகை ; காண்டும் : தன்மைப்பன்மை
வினைமுற்று விகுதி : ஈண்டுபு : செய்பு என்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சம். சோலையிலமர்ந்தபோது பல முனிவர் வந்து கண்டு
வணங்கினர் என்பது.
                                                     (3)

 
  விண்ணுலக நிகழ்ச்சியை முனிவர் வினவல்   
462. இருந்த பின்னர் இருளறு நன்குணத்
தருந்த வத்தர் அனைவரும் ஐயநீ
பொருந்து பொன்னகர் புக்கபி னுற்றது
திருந்த வேயருள் செய்கென்று செப்பினார்.

     (இ - ள்.) இருந்த பின்னர் - இருந்த பிறகு, இருள் அறு - மலம்
அகன்ற, நன்குணத்து அருந்தவத்தர் அனைவரும் - நற்குணம் நிரம்பிய
அருந்தவமுனிவர் எல்லோரும், ஐய - பெரியோய்!, நீ பொருந்து
பொன்னகர் புக்கபின் - நீ பொருத்தமான தேவருலகம் போய்ச்
சேர்ந்தபின், உற்றது - ஆண்டு நடந்ததைத், திருந்தவே அருள்
செய்கென்று - திருத்தமாகச் சொல்லி யருளுவாய் என்று, செப்பினார் -
வினாவினர்.

     நன்மை + குணம் = நன்குணம் அனைவரும் : முற்றும்மை ; ஐய :
விளிவேற்றுமை : ஐயன் என்பது பெயர். உற்ற : ஒன்றன்பால்
வினையாலணையும் பெயர். செய்கென்று : செய்க என்று என்பது.
அகரங்குறைந்து நின்றது. இது தொகுத்தல் விகாரம்.
                                                     (4)

 
  கோசிகன் உண்மை கூறாது மறைத்தல்   
463. கொற்ற வாசவன் கூறிய மாற்றமும்
மற்றோர் வாய்மை வசிட்டன் உரைத்ததும்
உற்ற வாறும் உணர்த்துதல் இன்றியே
கற்றோர் வஞ்சனைக் கட்டுரை கூறுவான்.