பக்கம் எண் :


241

     உம்மை: எண்ணும்மை: நெந்நெல் வெண்ணெல்: உம்மைத் தொகை;
வயலும் பொழிலும் பொய்கையும் கடந்து வனஞ்சென்று பன்னசாலையை
அடைந்தனர் என்பது. பழுவம் - காடு. பன்னசாலை - இலைவேய்ந்த
குடில்.
                                                    (18)

  அரிச்சந்திரன் கருத்தினைக் கோசிகற்கு விளம்புதல்   
477. அன்ன காலை அருந்தவக் கௌசிகன்
றன்ன டித்துணை தாழ்ந்தரிச் சந்திரன்
பொன்ன ளிக்கப் பொருந்தினன் என்றவர்
சொன்ன பின்னர்த்தம் சூழலிற் போயினார்.

     (இ - ள்.) அன்னகாலை - அப்பொழுது, அருந்தவக் கௌசிகன்
தன் அடித்துணை தாழ்ந்து - அரிய தவம்புரிகின்ற விசுவாமித்திரனுடைய
இரண்டு திருவடிகளைப் பணிந்து, அரிச்சந்திரன் பொன் அளிக்கப்
பொருந்தினன் என்று - அரிச்சந்திரன் பொருள் கொடுப்பதற்கு
இசைந்தான் என்று, அவர் சொன்னபின்னர் தம் சூழலிற் போயினார் -
அம் முனிவர்கள் சொன்னபிறகு தங்கள் இடத்திற்குச் சென்றார்கள்.

     கௌசிகன் - தன் : பகுதிப்பொருள் விகுதி: பின்னர் - அர் :
பகுதிப்பொருள் விகுதி; சூழலில் : உருபுமயக்கம், கோசிகனிடம் பணிந்து
அரிச்சந்திரன் செயலைக் கூறினர். பின்னர் அம் முனிவர்
அவரவரிருக்கைக்குச் சென்றனர் என்பது.
                                                    (19)

 
  அரிச்சந்திரனைக் காணக் கோசிகன் செல்லுதல்  
478. அடிவ ணங்கி அருந்தவர் போனபின்
கடிது சிற்சில திங்கள் கழித்துநீள்
வடிசு டர்ப்படை மன்னனைக் காணிய
கொடிய பாதகக் கோசிகன் தோன்றினான்.

     (இ - ள்.) அருந்தவர் அடி வணங்கி போனபின் - செயற்கருந்
தவம்புரிந்த முனிவர்கள் தன்னுடைய திருவடிகளை வணங்கிப் போனபிறகு,
கடிது - விரைவிலே, சிலசில திங்கள் கழித்து - சிற்சில மாதங்கள் கழிந்த
பிறகு, கொடிய பாதகக் கோசிகன் - கொடுமையான பாவச்செயல்களைச்
செய்யத் துணிந்த கௌசிகன், வடி சுடர்ப்படை மன்னனைக் காணிய
தோன்றினான் - வடித்தெடுக்கப்பட்ட ஒளி பெருந்திய
வேற்படையையுடைய அரிச்சந்திரனைக் காணும் பொருட்டு வந்தான்.

     அருந்தவர்: பண்புத்தொகை; சில+சில=சிற்சில. காணிய : செய்யா
என்னும் வாய்பாட்டு வினையெச்சம், பின் அரிச்சந்திரனைப் பல
துன்பத்துக்குள்ளாக்குஞ் செயல்புரிவதால் கோசிகனை 'கொடிய பாதகக்
கோசிகன்' என்றார்.
                                                    (20)