பக்கம் எண் :


245

     மந்தர அசலம் - மந்தராசலம் : தீர்க்கசந்தி; மாதவர் : உரிச்
சொற்றொடர் : நீ இங்கு வந்ததற்குக் காரணம் எந்த மாதவமோ அறியேன்
என்று முகமனுரை கூறிப் பின் வந்த காரணம் வினவினான் என்க.
                                                    (27)

 
  கௌசிகன் கூறலும் காவலன் வினவலும்   
486. காவல் மன்ன கடிமறை வேள்விக்கென்
ஏவல் மாக்கட் கிசைத்த பெரும்பொருள்
தாஎ னச்சொலக் கேட்டரிச் சந்திரன்
ஈவ லெத்துணை வேண்டுமென் றேத்தினான்.

     (இ - ள்.) காவல் மன்ன - உலகத்தைக் காக்கின்ற அரசனே!, கடி
மறை வேள்விக்கு - புதிதாகிய வேதங்களிற் கூறப்பட்ட வேள்விக்கு, என்
ஏவல் மாக்கட்கு இசைத்த பெரும் பொருள் - எனது ஏவலால் வந்த
முனிவர்களுக்கு நீ கொடுப்பதாக இசைத்த பெரும் பொருளை, தா எனச்
சொல் - இப்பொழுது என்னிடம் கொடு எனச் சொல்ல, அரிச்சந்திரன்
கேட்டு - அரிச்சந்திரன் கேட்டு, ஈவல் எத்துணை வேண்டும் என்று
ஏத்தினான் - இப்பொழுதே கொடுக்கிறேன் எவ்வளவு வேண்டும் என்று
வணங்கிக் கேட்டான்.

     கடி மறை : உரிச்சொற்றொடர்; ஈவல்; தன்மை ஒருமை எதிர்கால
வினைமுற்று: கடி : புதுமை. மறைநூல்களிற் கூறப்பட்ட புதிய வேள்வி
என்பது 'கடி மறை வேள்வி' என்பதன் பொருள் எனக் காண்க.
                                                    (28)

 
  வேள்விக்குப் பொருள் வேண்டுமளவு கூறுதல்   
487. மான வன்சொல மாமுனி நோக்கியே
யானை மேனின் றெறிந்த கவண்சிலை
போன தூரம் பொருள்குவிப் பாயெனின்
மோன வேள்வி முடித்திட லாமென்றார்.

     (இ - ள்.) மானவன் சொல - பெருமைபொருந்திய அரிச்சந்திரன்
அவ்வாறு சொல்ல, மா முனி நோக்கி - அருந்தவமுனி மன்னனைப்
பார்த்து, யானை மேல் நின்று - யானையின்மேல் ஏறி நின்றுகொண்டு,
எறிந்த கவண் சிலை - வானோக்கி எறிந்த கவண் கல், போன தூரம்
பொருள் - எவ்வளவு உயரம் போகுமோ அவ்வளவு உயரமான
பொருட்குவியலை, குவிப்பாய் எனின் - குவிப்பாயானால், மோன வேள்வி
முடித்திடலாம் என்றார் மௌனமாயிருந்து செய்யும் அந்த யாகத்தை
முடிக்கலாம் என்று கூறினார்.

     மானவன்: பண்புப்பெயர். சிலை - கல், மோனம் - மனம் அடக்கி
வாயடக்கியிருக்கும் நிலை.
                                                    (29)

 
  வேண்டிய பொரு ளீய வேந்தன் உடன்படல்   
488. இறைவன் இவ்வகை ஈகுவன் யானெனா
அறைதி றந்திவண் ஆனையைத் தம்மெனக்
குறைவில் வாதுவ ரோடிக் கொணர்ந்திடப்
பிறையெ யிற்றுப் பெருங்களி றுற்றதே.

     (இ - ள்.) இறைவன் - அரிச்சந்திரன், யான் இவ்வகை ஈகுவன்
எனா - நான் இவ்வாறே உனக்குப் பொருள் தருவேன் என்று, அறைதிறந்து
- நிதி அறையைத் திறந்து, இவண் ஆனையைத் தம் என - இங்கே
யானையைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட, குறைவு இல்
வாதுவர் ஓடிக் கொணர்ந்திட - குறைவில்லாத யானைப்பாகர் ஓடிப்போய்க்
கொண்டுவர, பிறை எயிற்றுப் பெருங் களிறு உற்றது - பிறைபோன்ற
வளைவும் கூர்மையும் வெண்மையும் உடைய தந்தங்களையுடைய பெரிய
யானையும் வந்தது.

     ஈகுவன் : தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று: எனா : செய்யா
என்னும் வாய்பாட்டு வினையெச்சம் தம்மின் என்பது குறைந்து 'தம்' என
நின்றது. இது முன்னிலையேவற்பன்மை வினைமுற்று. பிறை எயிறு :
உவமைத்தொகை, தாரும் என்பது தம் என மருவியது.
                                                    (30)

 
  'வேள்வி தொடங்கும் நாளில் வழங்குக' என்றல்   
489. ஒத்த தேயமை யும்மென தொண்பொருள்
வைத்த னன்நின் னிடத்தடை மன்னயான்
சுத்த வேள்வி தொடங்கிடு நாளெனக்
குய்த்தி நீயென் றுரைத்தவன் ஏகினான்.

     (இ - ள்.) மன்ன - அரசனே!. ஒத்ததே அமையும் - நீ
சம்மதித்ததே போதும், எனது ஒண் பொருள் நின்னிடத்து அடை - நீ
எனது வேள்விக்குக் கொடுக்க இசைந்ததால் எனக்குச் சொந்தமாகிய சிறந்த
பொருளை உன்னிடமே அடைக்கலமாக வைத்தேன். யான் சுத்த வேள்வி
தொடங்கிடு நாள் - நான் பரிசுத்தமான யாகத்தைத் தொடங்குகின்ற
நாளில், நீ எனக்கு உய்த்தி என்று உரைத்து - நீ என்னிடம் சேர்த்து
விடுவாயாக என்று கூறி, முனிவன் ஏகினான் - கோசிகன் சென்றான்.

     வேள்வியாகிய நற்றொழிலுக்குப் பயன்படுதலின் 'ஒண் பொருள்'
ஆயிற்று. அடை : முதனிலைத் தொழிற்பெயர்; உய்த்தி : முன்னிலை
ஒருமை ஏவல் வினைமுற்று உய் : பகுதி; த் : சந்தி; த் : எழுத்துப் பேறு
இ: முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி வேள்வி தொடங்கும் காலம்
வரை நின் பால் அடைக்கலமாக என் பொருளை வைத்தேன்; அதனைக்
காத்துப் பின்னர்த் தருக என்பது குறிப்பு.
                                                    (31)

   விலங்கு பறவைகளை விசுவாமித்திரன் வருக என நினைத்தல்
  
490. அருவ னம்கடந் தாச்சிர மம்புகுந்
தொருத ருத்தட நீழல் உறைந்துபார்
மிருகம் புள்ளினம் யாவும் விரைந்திவண்
வருக என்று மனந்தனில் உன்னினான்.