பக்கம் எண் :


260

     'வேட்டையாடி விலங்கினத்தை யழித்தல் நன்று' எனக் கூறல்

523. கூட்ட வேடரும் கோலும்வை வேலுநாய்
ஈட்ட மும்கொடு கானகத் தெய்திநீ
வேட்டை ஆடி விலங்கினம் மாய்த்துநந்
நாட்டை ஓம்ப னலனெனக் கூறினார்.

     (இ - ள்.) கூட்ட வேடரும் கோலும் வை வேலும் நாய் ஈட்டமும்
கொடு - வேடர் கூட்டத்தையும் குத்துக்கோல்களையும் கூர்மையான
வேலாயுதத்தையும் நாய்க்கூட்டத்தையும் சேர்த்துக்கொண்டு, கான கத்து
எய்தி - காட்டினை அடைந்து, வேட்டை ஆடி விலங்கினம் மாய்த்து -
வேட்டையாடி மிருகக்கூட்டங்களை அழித்து, நம் நாட்டை ஓம்பல் நலன்
எனக் கூறினார் - (நீ) நமது நாட்டைப் பாதுகாத்தல் நல்லது எனச்
சொன்னார்கள்.

     வேடரும் கோலும் போல் வருவனவற்றிலுள்ள உம் எண்ணுப்
பொருளில் வந்தது, ஓம்பல்: தொழிற்பெயர். ஓம்பு: பகுதி, அல்: விகுதி.
நலம் நலன் போலி.
                                                     (3)

  அரசன் வேடுவரை அழைமின் என ஆணை தருதல்   
524.

என்ற மைச்சர் இயம்பலும் மன்னவன்
நன்று நன்றென நண்ணி மனக்கொளாக்
குன்ற வாணரைக் கூட்டிக் கொணர்கென
நின்ற தூதர் தொழுதயல் நீங்கினார்.

     (இ - ள்.) என்று அமைச்சர் இயம்பலும் - என்று அமைச்சர்கள்
சொன்னவுடன், மன்னவன் நன்று நன்று என நண்ணி - அரசன் மிக நன்று
என்று இசைந்து, மனக் கொளா - மனத்திற்கொண்டு, குன்றவாணரைக்
கூட்டிக் கொணர்கென - மலை வாழ் வேடுவரைக் கூட்டிக் கொண்டு
வாருங்கள் என்று சொல்ல, நின்ற தூதர் - அங்கு ஏவல் கேட்டு நின்ற
தூதர், தொழுது அயல் நீங்கினார் - வணங்கி வெளியே கூட்டிக்கொண்டு
வருவதற்குச் சென்றனர்.

     அடுக்கு: துணிவுபற்றி வந்தது. கொளா: செய்யா என்னும் வாய்பாட்டு
வினையெச்சம். கொணர்கென: தொகுத்தல். கொணர்க+என என்பது.
                                                     (4)

 
  தூதர்கள் வேடர்கட்குச் சொல்லுதல்   
525.

ஓடி னார்கள் உயர்வரைக் கானக
நாடி னார்கணம் நாயக னுங்களைத்
தேடி னானென்று செப்பலும் சிற்சிலர்
கூடி னார்துடி கொட்டினர் எங்குமே.

     (இ - ள்.) ஓடினார்கள் உயர் வரைக் கானகம் நாடினார்கள் -
தூதர்கள் ஓடிப்போய் உயர்ந்த மலைக்காடுகளில் தேடினார்கள், நம்
நாயகன் உங்களைத் தேடினான் என்று செப்பலும் - நம் அரசன்
உங்களைத் தேடினான் என்று சொன்னவுடன். சிற்சிலர் கூடினார் எங்கும்
துடிகொட்டினர் - சிலர் கூடி எங்கும் பம்பை அடித்தார்கள்.