பக்கம் எண் :


266

      கரிய நாய் வரவு
534. வால்சு ருண்டுநுனி வாய்வ ளர்ந்துதட
   மார்ப கன்றிடை சிறுத்துவெந்
மேலு யர்ந்தணி சிரம்ப ருத்துநெடு
   வீர வாளெயி றிலங்கிட
நாலு கின்றமணி ஆர மென்றுநெடு
   நாநி மிர்ந்துதுளி தாழவே
கால்உ யர்ந்துகிர் விளர்த்து மொய்த்துவரு
   கரிய நாய்கள்சத கோடியே.

     (இ - ள்.) வால் சுருண்டு நுனி வாய் வளர்ந்து - வாலானது
சுருண்டு நுனி வாய் நீண்டு, தட மார்பு அகன்று - பெரிய மார்பானது
அகன்று, இடை சிறுத்து - இடையானது சிறுத்து, வெந் மேல் உயர்ந்து -
முதுகு மேலே உயர்ந்து, அணி சிரம் பருத்து - அழகிய தலை பருத்து,
நெடு வீர வாள் எயிறு இலங்கிட - நீண்ட வீரமும் ஒளியும் பொருந்திய
பற்கள் விளங்கிட, நாலுகின்ற மணி ஆரம் மென்று - தொங்குகின்ற மணி
மாலைகளைக் கடித்து மென்றுகொண்டு, நெடு நா நிமிர்ந்து துளி தாழ -
நீண்ட நாக்குகள் நிமிர்ந்து நீர்த்துளிகளைக் கீழே சொட்ட, கால் உயர்ந்து
- கால்கள் உயர்ந்து, உகிர் விளர்த்து - நகங்கள் வெளுத்து, மொய்த்து
வரு கரிய நாய்கள் சதகோடி - நெருங்கி வருகின்ற கருநிற நாய்கள்
நூறுகோடிக் கணக்காகும்.

     ஏகாரங்கள் : அசை.

     வேட்டை நாய்களின் இயற்கையை இக் கவி காட்டும்; வால்
சுருண்டிருத்தல், வாய் நீண்டிருப்பது, மார்பகன்றிருப்பது, இடை
சிறுத்திருப்பது, முதுகு மேலுயர்ந்திருப்பது, தலை பெரிதாக இருப்பது,
கால் உயர்ந்திருத்தல், நகம் வெளுத்திருத்தல் இவையெல்லாம்
வேட்டைநாய்க் கிலக்கணம் என உணர்க.
                                                    (14)

 
535. நிலைபெ யர்ந்துலவு நீல மால்வரைகள்
   நிகரெ னப்பிடரி னுகநிறீஇத்
தலையி றக்கி அகல் வாயில் வெண்ணுரை
   தயங்க நாமுழம் இறங்கவே
அலைஎ ழும்சலதி ஒலிஎ னக்கதறி
   அணிக ரும்பகடி ழுக்கநீள்
வளைக ளும்திரையும் வாரும் வன்கயிறும்
   வந்த வன்சகட னந்தமே.

     (இ - ள்.) நிலை பெயர்ந்து உலவு நீல மால் வரைகள் நிகரென -
தங்கள் நிலையைவிட்டுப் பெயர்ந்து சஞ்சரிக்கின்ற நீலநிறமான பெரிய
மலைகளுக்கு ஒப்பானது என்று சொல்லும்படி, பிடரின் நுகம் நிறீஇ -
பிடரியிலே நுகத்தடியினை நிறுத்தி, தலை இறக்கி - தலைகளைத்
தொங்கப்போட்டுக்கொண்டு, அகல் வாயில் வெண்ணுரை தயங்க -
அகன்ற