பக்கம் எண் :


289

580. சேனை யும்பெருந் தேர்களும் திண்பரித் திரளும்
யானை யும்கொடு முடுவலும் இறந்திட வெற்றிக்
கானெ லாம்பிணக் காடுசெய் தெய்திற்றுக் கண்டாய்
தேன லங்கலாய் தேரினைத் திரித்தருள் என்றான்.

     (இ - ள்.) தேன் அலங்கலாய் - தேன் சிந்துகின்ற மாலையணிந்த
மன்னனே, சேனையும் பெருந் தேர்களும் - சேனைகளும் பெரிய
தேர்களும், திண் பரித் திரளும் யானையும் - வலிமைவாய்ந்த
குதிரைகளும் யானையும், கொடு முடுவலும் இறந்திட எற்றி -
கொடுமையான நாய்களும் இறந்துபோகும்படி குத்திக்கொன்று,
கான்எலாம் பிணக்காடு செய்து எய்திற்று - காடு முழுவதையும்
பிணக்குவியலாகும்படி செய்து அவ்விடத்தை அடைந்தது, தேரினைத்
திரித்தருள் என்றான் - தேரினைப் பன்றி இருக்கும் திசை நோக்கித்
திருப்பி வருக என்றான்.

     கண்டாய் : முன்னிலை அசை.

     அரசே ! யானை தேர் பரி ஆள் என்ற நால்வகைச் சேனைகளும்
நாய்களும் இறந்திடும்படி எற்றிப் பிணக்காடாக்கிவிட்டு வந்தது,
அதனைப் பார்க்க நீங்கள் தேரினைத் திருப்புக என்றான்.
                                                    (60)

       பன்றியைக் கொல்ல மன்னன் செல்லுதல்

    அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
 
581. என்று பகர்ந்திட மன்னர் மன்னன் எழுந்த கதத்துடனே
நன்றிது நன்றென அங்கையொ டங்கை அறைந்து
   
                             நகைத்துடனே
இன்று மடிந்தவர் இன்னுயிர் தம்மிலும் எம்உயி
   
                             ரோவலிதென்(று)
அன்று சவுந்தரி தந்த நெடுஞ்சிலை அங்கை எடுத்தனனே.

     (இ - ள்.) என்று பகர்ந்திட - என்று வேடன் ஒருவன்
கூறியவுடனே, மன்னவர் மன்னன் எழுந்த கதத்துடனே - பேரரசனாகிய
அரிச்சந்திரன் மிகுந்த கோபத்துடன், நன்றிது நன்றென - இது நன்று
நன்று என்று, அங்கை கொடு அங்கை அறைந்து - உள்ளங்கையால்
தட்டி, உடனே நகைத்து - உடனே கோபச்சிரிப்புச் சிரித்து, இன்று
மடிந்தவர் இன்னுயிர் தம்மிலும் என் உயிரோ வலிது என்று - இன்று
இறந்தவருடைய இனிய உயிரைக்காட்டிலும் எம்முடைய உயிரோவலிமை
உடையது என்று, அன்று சவுந்தரி தந்த நெடுஞ்சிலை அங்கை
எடுத்தனனே - முன்பு காளிதேவி கொடுத்த நீண்ட வில்லைக் கையில்
எடுத்தான்.

     காளி கொடுத்த கடுஞ்சிலையைக் கையில் எடுத்துச் சினத்துடன்
அரசன் சென்றனன். ஒரு பன்றி வந்து இவ்வாறு கொன்று குவித்தது
வியப்பானதென்று சிரித்தான்; கைகொட்டினான்; என்னுயிர் பெரிதோ
என்றுங் கூறினன்.
                                                    (61)

 
582. பாகரின் மிக்கவ னான்மறை முற்றெதிர் பாகுகு றித்தவனும்
சாகர முற்றெழு பானு குலத்திறை தாளிணை யைத்தொழுதே
நாகரி கச்சுட ராடர வப்பணி நாயகி பொற்சடிலச்
சேகரி பத்திர காளி கொடுத்தரு டேரை நடத்தினனே.