பக்கம் எண் :


305

     (இ - ள்.) அருத்தியின் புணர்ந்த மாதர் ஐவரில் - நான்
விருப்பத்தோடு புணர்ந்த பெண்கள் ஐவரில், அருந்தவத்தோற்கு
ஒருத்தியை யானே ஈந்தேன் - அரிய தவமுனிவன் ஒருவனுக்கு ஒரு
பெண்ணை யானே விருப்பத்துடன் கொடுத்தேன், ஒருத்தி போய்
அவனோடு உற்றாள் - மற்றொருத்தி தானே சென்று அவனுடன்
சேர்ந்தாள், ஒருத்தி ஊண் அற்று அகன்றாள் - மற்றொருத்தி உணவு
இல்லாமல் விலகிச் சென்றாள், ஒருத்தி போய்க் கண் இழந்தாள் -
ஒருத்தி கண்களை இழந்து வருந்தினாள், ஒருத்தி என்னை விட்டு
நீங்காது இருமைக்கும் உறுதி தந்தாள் - ஒருத்தி என்னை விட்டு
நீங்காமல் துணையாயிருந்து இம்மை மறுமைக்கு வேண்டிய நன்மைகளைச்
செய்தாள்.

     அரசன் தான் கண்ட கனாவினை விளக்கினன். 'நான் ஐந்து
மாதரை மணந்தேன்; முனிவர்க்கு ஒருத்தியைக் கொடுத்தேன்;
மற்றொருத்தி தானே போய்ச் சேர்ந்தாள்; ஒருத்தி உணவில்லாமல்
நீங்கினாள்; ஒருத்தி கண்ணிழந்தாள்; ஒருத்தி என்னை விட்டு நீங்கா
திருந்தாள்; இதுதான் நான் கண்ட கனா' என்றான்.
                                                    (94)

 
615.

இப்படி இன்று கண்டேன் இக்கொடுங் கனவி னாலே
எப்படி விளைவ தோவஃ துணர்ந்திலேன் இயம்பும் என்னா
அப்படி அரசன் கூற அடியிணை தொழுது நன்னூற்
றப்பற உணர்ந்த கேள்விச் சத்திய கீர்த்தி சொல்வான்.

     (இ - ள்.) இப்படி இன்று கண்டேன் - இப்படி இன்று கனவு
கண்டேன், இக் கொடுங்கனவினாலே எப்படி விளைவதோ - இந்தக்
கொடிய கனவினால் எப்படிப்பட்ட தீமை விளையுமோ, அஃது
உணர்ந்திலேன் இயம்பும் என்னா - அதனை யான் அறியேன் நீங்கள்
கூறுங்கள் என்று, அப்படி அரசன் கூற - அப்படி அரசன் கூறியவுடன்,
நன்னூல் தப்பற உணர்ந்த கேள்வி சத்தியகீர்த்தி - நல்ல நூல்களைக்
குற்றமற அறிந்த கேள்வியறிவினையும் உடைய சத்தியகீர்த்தி என்பவன்,
அடியிணை தொழுது சொல்வான் - மன்னன் திருவடிகளை வணங்கிக்
கூறத் தொடங்கினான்.

     கல்வியறிவோடு கேள்வியறிவும் அமைச்சர்க்கு இன்றியமையாது
வேண்டும் என்பார், 'கேள்விச் சத்தியகீர்த்தி' என்றார். கொடுங்கனவு
என்றான் தான்மணந்த மனைவியரைப் பிறர்க்குக் கொடுத்ததும்
அவர்கள் தன்னை விட்டு ஓடியதும் கண்ணிழந்ததுமாகிய
தீயசெயல்களைக் கண்டதனால்தான்.
                                                    (95)

          அமைச்சன் கனவின் பயன் கூறுதல்
616. அருவினை விளைத்த தெல்லாம் கௌசிகன் அவனால் இன்னம்
வருவினை மிகவும் உண்டு வளநகர் நாடி ழந்து
திருவினை இழந்து சேயும் செவ்வியும் வேறு வேறாப்
பெருவினை முடிப்பான் தன்னைப் பின்னையாம் வெல்வோம்
   
                                       என்றான்.