பக்கம் எண் :


362

கைகாட்டி அமைதிகொள்ளும்படி செய்து, பழுது இலாது நீர் எமக்கு
முன் செய்த அப் பரிசே - குற்றம் சிறிதும் இல்லாமல் நீங்கள் எமக்கு
முன்பு செய்த அவ்விதமே, முழுதும் இந்த மா முனிவற்கும் முறை செயும்
என்றான் - இந்தச் சிறந்த முனிவனுக்கும் முழுதும் நன்முறையிற்
செய்யுங்கள் என்று கூறினான் (அரிச்சந்திரன்).

     முனிவனை வணங்கியபின் அரிச்சந்திரன் எழுந்து நின்றான். அம்
மன்னனைக் கண்டு குடிகளெல்லாரும் மந்திரிகளும் அழுதனர். அழுது
புலம்பியவர்களையெல்லாம் கையமைத்து 'நீங்கள் அனைவரும் இம்
முனிவர்க்குப் பணிசெய்யுங்கள்; என்னைப்போல அரசனாகக் கருதுங்கள்'
என்றான்.
                                                   (120)

 
739. எவர்க்கு நல்லவர் திரிபுரம் எரிஎழச் சிரித்த
சிவற்கு நல்லவர் செங்கண்மா லுக்கும்நான் முகத்தின்
அவற்கு நல்லவர் அமரர்க்கும் நல்லவர் ஆவர்
இவற்கு நல்லவர் எனக்கு நல்லவர்என இசைத்தான்.

     (இ - ள்.) எவர்க்கும் நல்லவர் - இம் முனிவர் எல்லோர்க்கும்
நல்லவர், திரிபுரம் எரி எழச் சிரித்த சிவற்கு நல்லவர் -
முப்புரங்களையும் எரியுண்ணுமாறு சிரித்த சிவபெருமானுக்கும் நல்லவர்,
செங்கண்மாலுக்கும் நான்முகத்தன் அவற்கும் நல்லவர் - சிவந்த
கண்களையுடைய திருமாலுக்கும் நான்கு முகங்களையுடைய அயனுக்கும்
நல்லவர், அமரர்க்கும் நல்லவர் ஆவர் - தேவர்களுக்கும் நல்லவர்
ஆவார், இவர்க்கு நல்லவர் எனக்கு நல்லவர் என இசைத்தான் - இம்
முனிவருக்கு நல்லவராய் இருப்பவர் எனக்கு நல்லவர் ஆவர் எனக்
கூறினான்.

     அரிச்சந்திரன் அனைவரையும் நோக்கி 'இம் முனிவர் எவர்க்கும்
நல்லவர் ஆதலால் இவர்க்கு நல்லவராகப் பணிபுரியும் பொதுமக்கள்
எல்லாரும் இனி எனக்கு நல்லவராவர்' என்று கூறினான்.
                                                    (121)

 
740. வையம் ஏழுடை மன்னவன் அவ்வுரை வழங்கச்
செய்ய வாய்மலர் செங்கையாற் புதைத்தடி வணங்கி
ஐய நின்மொழி மறுப்பவ ராரெனா முகத்திற்
கைய றைந்தழக் கண்டஅக் கௌசிகன் கருதும்.

     (இ - ள்.) வையம் ஏழுடை மன்னவன் அவ்வுரை வழங்க - ஏழ
உலகங்களையும் தன் புகழால் ஆளும் மன்னன் அவ்வாறு கூறியவுடன்,
செய்ய வாய் மலர் செங்கையால் புதைத்து அடி வணங்கி - சிவந்த
மலர்போன்ற வாயினைச் சிவந்த கையால் மூடி அவன் திருவடிகளில்
வணங்கி ஐய நின் மொழி மறுப்பவர் ஆர் எனா - ஐயனே! உன்னுடைய
மொழியை மறுப்பவர் யார் இருக்கின்றார் என்று கூறி, முகத்தில் கை
யறைந்து அழக் கண்ட - முகத்தில் கையினால் அறைந்துகொண்ட
அழுகின்ற செயலைக் கண்ட, அக் கௌசிகன் கருதும் - அக் கௌசிக
முனிவன் நினைக்கத் தொடங்கினான்.