பக்கம் எண் :


368

     தோல் - யானை, நூலினோர், பூணூல் தரித்தவர் என்பதும் ஆம்.
கவுந்தியர் - ஒருவகைத் தவநெறியுடைய பெண்கள். முக்கோல் -
முனிவர்தம் கையில் வைத்திருக்கும் திரிதண்டம். தெருவெல்லாம் முனிவர்
கூட்டங்களே நிறைந்தன. யானை, குதிரை, வேல் கொண்ட வீரரும்
மங்கையரும் மறைந்தனர்.
                                                   (133)

 
752. புனித மாதவர் சூழ்ந்திடப் புரவலர் போற்றக்
கனிதி ருந்திய செய்யவாய்க் கன்னியர் காண
நனிதி ருந்திய நவமணி யாதனத் தேறி
இனிதி ருந்துல காண்டனன் கௌசிகன் இப்பால்.

       (இ - ள்.) இப்பால் - அயோத்தி நகரமாகிய இவ்விடத்தில்,
புனித மாதவர் சூழ்ந்திட புரவலர் போற்ற - தூய்மையான முனிவர்கள்
சூழவும் மற்றைய மன்னர் பாராட்டவும், கனி திருந்திய செய்ய வாய்
கன்னியர் காண - கொவ்வைப்பழம் போன்ற சிவந்த வாயினையுடைய
பெண்கள் கண்டு களிக்கவும், நனி திருந்திய நவமணி ஆதனத்து ஏறி -
மிகத் திருத்தமாகச் செய்யப்பட்ட நவமணிகள் பதித்த ஆசனத்தில் ஏறி,
இனிது இருந்து - இனிமையாக வீற்றிருந்து, கௌசிகன் உலகு ஆண்டனன்
- கௌசிகமுனிவன் இவ்வுலகத்தை ஆண்டான்.

     பணிப் பெண்களை விலக்காதிருந்தனன் ஆதலால் 'கன்னியர்
காண' என்றார். வேற்றுநாட்டுமன்னர் வந்து கண்டு திறைசெலுத்தும் படி
ஆண்டனன் என்பது 'புரவலர் போற்ற' என்ற குறிப்பால் தோன்றிற்று.
                                                   (134)

            சூழ்வினைக் காண்டம் முற்றிற்று.