பக்கம் எண் :


382

என்று கூறி 'நீ என்ன செய்யினும் நான் கொடுத்த அரசுரிமையை
இனிமேல் வாங்கவேமாட்டேன்' என்று உறுதியாக எடுத்துரைத்தான் என்க.
                                                    (20)

 
773. பொன்கேட்கப் பொன்அளித்தான் புவிகேட்கப் புவிஅளித்தான்
   போதா தென்னா
என்கேட்கி னும்தருவ தில்லைஎனும் புன்மைஇவ
   னிடத்தி லில்லை
முன்கேட்ட பொருளாலே மொழிவழுவந் தெய்தும்அது
   முடக்க மானாற்
பின்கேட்டா ரிகழ்வார்கள் யாம்பொறுத்தும் எனநினைந்து
   பேச லுற்றான்.

       (இ - ள்.) பொன் கேட்கப் பொன் அளித்தான் - நாம்
பொன்னைக் கேட்டபோது பொன்னைக் கொடுத்தான், புவி கேட்கப் புவி
அளித்தான் - பூமியைக் கேட்டபோது பூமியையும் அளித்தான், போதாது
என்னா - போதாது என்று, என் கேட்கினும் தருவது இல்லை எனும்
புன்மை இவனிடத்தில் இல்லை - என்ன கேட்டாலும் தருவதில்லை என்று
கூறும் புன்மைக்குணம் இவனிடத்தில் இல்லை, முன் கேட்ட பொருளாலே
மொழி வழு வந்து எய்தும் - முன்பு நாம் கேட்டபொருள்
கொடுக்கமுடியாமல் சொன்ன சொல் தவறும் நிலை இவனுக்கு வந்து
சேரும், அது முடக்கமானால் தடைபடுமானால் பின்பு கேள்விப்பட்டவர்
இகழ்ந்து பேசுவார்கள், யாம் பொறுத்தும் என நினைந்து பேசலுற்றான் -
யாம் பொறுத்துக்கொள்ளுவோம் என்று நினைத்துப் பேசத் தொடங்கினான்.

     "இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
     குலனுடையான் கண்ணே உள"

என்னும் குறட்கருத்து இச்செய்யுளில் அமைந்துள்ளது. எப்படியேனும்
மன்னனைத் துன்புறுத்தவேண்டும் என எண்ணும் முனிவன், 'முடக்க
மானால் பின் கேட்டார் இகழ்வார்கள்' எனக் கருதினான்.
                                                    (21)

 
774. ஒன்றுரைக்க நீகேளாய் உண்மைக்கும் வண்மைக்கும்
   உரியோய் என்னை
இன்றுரைத்த பிழைபொறுத்தேன் அழல்வேள்வி முடித்திடுதற்
   கீவே னென்றங்
கன்றுரைத்த பொருளதனை அளிப்பாயோ அளியாயோ
   அரச என்றான்
என்றுரைத்த கௌசிகனை அடிதொழுது வாய்புதைத்தங்
   கீது ரைப்பான்.

     (இ - ள்.) உண்மைக்கும் வண்மைக்கும் உரியோய் - உண்மை
பேசுதலிலும் கொடைத்தன்மையிலும் சிறப்பு உடைய மன்னனே, ஒன்று