பக்கம் எண் :


39

   கோசலத்தில் தேனாறு கரும்பாறு
68. சேறு பாய்மலர்த் தேனொடு தீங்கனி
ஊறு பாய்வவும் ஒண்கரும் பட்டதீஞ்
சாறு பாய்வவும் தத்தமிற் கூடியே
ஆறு பாய்வன அங்கங் கனந்தமே.

     (இ - ள்.) சேறு பாய் மலர்த் தேனொடு - நிலத்திலே சேறாகும்படி
பாய்கின்ற பூவின் தேனொடு, தீம் கனி ஊறு பாய்வவும் - இனிமையான
பழச்சாறு பாய்கின்றவைகளும், ஒண் கரும்பு அட்டதீஞ்சாறு பாய்வவும் -
இனிய கரும்பிலிருந்து ஆலையில் ஆட்டி எடுக்கப்பட்ட இனிய கருப்பஞ்
சாறு பாய்கின்றவைகளும் ஆகிய இவைகள், தம்மிற் கூடி - தங்களுக்குள்
ஒன்றாகக் கூடி, ஆறு பாய்வன - ஆற்றிற் பாய்கின்றவை, அங்கு அங்கு
அனந்தம் பல - பல இடங்களிலும் பல உள.

     ஒடு : எண்ணுப்பொருளில் வந்தது; அங்கு அங்கு : அடுக்குப்பன்மை
பற்றி வந்தது. மலர்த்தேனும் பழச்சாறும் கருப்பஞ் சாறுங்கூடி யாற்றிற்
பாயும் இடங்கள் பல அந்நாட்டில் உள்ளன என்பது. இவைகள் நீர் போல
எங்கும் ஊறி வழிந்து வாய்க்கால் வழிச்சென்று ஆற்றில் கலக்கும்என்பது
கருத்து.
                                                    (54)

 
     தென்றலும் மகரந்த மழையும்
69. மன்றல் தங்கும் மலர்களின் மேய்ந்திளந்
தென்றல் வந்தவண் சிந்திய தாதுகள்
குன்றின் வீழ்பொன் மழைக்குழு என்னவே
முன்றி லும்மணி மாடமும் மொய்க்குமே.

     (இ - ள்.) இளந் தென்றல் மன்றல் தங்கும் மலர்களின் மேய்ந்து
வந்து அவண் சிந்திய தாதுகள் - இளந்தென்றற் காற்றானது மணம்
பொருந்தி மலர்களிற் படிந்து பூந்தாது உட்கொண்டு வந்து அந் நாட்டில்
உதிர்த்த மகரந்தப்பொடிகள், குன்றின் வீழ் பொன் மழைக் குழு என்ன
- மலைகளின்மேல் பெய்கின்ற பொன்மழைக் கூட்டங்களைப் போல,
முன்றிலும் மணி மாடமும் மொய்க்கும் - முற்றங்களிலும் அழகிய
மாடங்களின்மேலும் நிறைந்து படியும்.

     மாடங்களிலும் முற்றங்களிலும் மகரந்தப்பொடி படிதற்கு மலையில்
பொன் மழை பெய்தலை உவமையாகக் கூறினார். பொன் மழை பெய்தல்
இன்மையின் இல்பொருள் உவமை அணி. மேய்தல் தென்றலுக்கின்மையின்
இது இலக்கனை. வீழ் பொன் மழை - வினைத் தொகை. குன்றின் வீழ் :
ஐந்தாவதனுருபு ஏழன்பொருளில் வந்த உருபுமயக்கம்.
                                                    (55)

 
   குறிஞ்சி நிலத்தில் கிளி கடிதல்
70. உகல ரும்புனத் திற்கிளி ஓச்சுவார்
அகல்க வண்கொண் டெறியும் அராமணி