பக்கம் எண் :


41

  நுளைச்சியர் கள்ளுக்கு முத்து அளத்தல்
72. கலைய ளக்கும் கரும்கண் நுளைச்சியர்
புலைய ளக்கு நறைக்கும் பொருந்திய
விலைய ளப்பன வெண்முத்த மேயறன்
நிலைய ளக்கும் பரதவர் நெய்தலே.

     (இ - ள்.) அறன் நிலை அளக்கும் பரதவர் நெய்தல் - அறத்தின்
எல்லையை அளந்து அறநெறி முடிவில் நிற்கின்ற வலையர்கள் வாழ்கின்ற
நெய்தல் நிலத்தில், கலை அளக்கும் கருங்கண் நுளைச்சியர் - நூல்களின்
எல்லையை அளக்கும் கருமையான கண்களையுடைய வலைச்சியர்கள்,
புலை யளக்கும் நறைக்கும் - இழிவின் முடிந்த எல்லையான கள்ளுக்கும்,
பொருந்திய விலை அளப்பன வெண் முத்தமே - தக்க விலையாக அளந்து
கொடுக்கும்பொருள் வெண்மையான முத்துக்களே.

     கலையளக்கும் கருங்கண் என்பதற்கு மானின் நேர் கருவிழி என்றும்
பொருள் கூறலாம். இழிந்த பொருளாகிய கள்ளுக்கும் முத்து அளப்பார்கள்
என்றால் சிறந்த பொருள்களுக்கு அதனிலும் பெருமதிப்புள்ள பொருள்கள்
கொடுப்பார் என்பதாம். நெய்தல்நில மகளிர் நூலறிவும், பிறவும்
தமபோற்செயும் சிறந்த வணிகத்திறனும் புலப்படும்.
                                                    (58)

  கோசலநாட்டின் மக்கள் சிறப்பு
73.

நிலம்வி ளக்கிடு நித்தில நீலவுற்
பலம்வி ளக்கிடு பைம்புனல் பண்பினன்
நலம்வி ளக்கிடு நல்லவர் வாய்மொழி
குலம்வி ளக்கிடும் கோசல நாடரோ.

     (இ - ள்.) குலம் விளக்கிடும் கோசல நாடு - நாடுகளின்
தொகுதியில் தன்னை மிகவும் சிறப்புற்று விளங்கச்செய்யும் கோசல
நாட்டில், நித்திலம் நிலம் விளக்கிடும் - முத்துக்கள் நிலத்தினை
விளங்கச்செய்யும், நீல உற்பலம் பைம் புனல் விளக்கிடும் -
நீலோற்பலப்பூக்கள் தெளிந்த தண்ணீரை விளங்கச்செய்யும், நல்லவர்
வாய்மொழி பண்பில் நல் நலம் விளக்கிடும் - நல்லோருடைய
வாயிலிருந்து வரும் சொற்கள் பண்பமைந்த நன்னெறிகளின் நன்மைகளை
விளக்கும்.

     வாய் மொழி என்றார் தீயசொற் பயிலாதவராய் என்பது விளக்குதற்கு.
'எவ்வழி நல்லவர் ஆடவர். அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்னும்
புறநானூற்றுச் செய்யுளின்படி ஏனை வளங்கள் கூறி முடிவில் நல்லோர்வாழ்
நிலனுங் கூறுகிறார்.
                                                     (59)

      நாட்டுச் சிறப்பு முற்றியது.