பக்கம் எண் :


447

     தெருவில் மங்கையர் நெருக்கம் இருந்தது. அவர்கள் கூந்தல் காடு,
கண்ணாகிய கடல், அல்குலாகிய பாம்பு, முலையாகிய மலை இவற்றைக்
கடந்துசெல்வது மிகவும் அரிதாயிற்று என்பது கருத்து.
                                                    (13)

 
920. உத்திர பத்தி மீதி லுயர்ந்தமா ளிகையி னெற்றிச்
சித்திரச் சாள ரங்க டிறந்துசெந் திருவை அன்னார்
வத்திரச் சிலைகள் கோட மன்னனை இலக்கா எய்த
அத்திரம் அனந்த கோடி அணைந்தில வறிவுக் கஞ்சி.

       (இ - ள்.) உயர்ந்த மாளிகையின் உத்திர பத்தி மீதில் நெற்றி
- உயர்ந்த மாளிகைகளின் உத்திர வரிசைகளின் மேல் உச்சியிலே,
செந்திருவை அன்னார் சித்திரச் சாளரங்கள் திறந்து - திருமகளைப்
போன்ற பெண்கள் அழகிய பலகணிகளைத் திறந்து, வத்திரச் சிலைகள்
கோட மன்னனை இலக்கா எய்தா - முகத்திலுள்ள புருவங்களாகிய
வில்களை வளைத்து மன்னனைக் குறிப்பாக வைத்து எய்த, அத்திரம்
அனந்த கோடி அணைந்தில அறிவுக்கு அஞ்சி - கண்ணாகிய அம்புகள்
பலகோடிக் கணக்கானவை மன்னனுடைய அறிவுக்கு அஞ்சி அவன் மேற்
பாய்ந்தில.

     மேன்மாடத்துப் பலகணி வழியாக மங்கையர் பலர் அரிச்சந்திரனைக்
காதலித்து நோக்கினர். அரிச்சந்திரன் அம் மங்கையரை ஏறிட்டுப்
பார்த்திலன் என்பது கருத்து. வத்திரம் - முகம்; வத்திரச் சிலைகள் -
முகத்திலுள்ள விற்கள் என விரிக்க. இது குறிப்பாகப் புருவங்களை
யுணர்த்தின. "புருவச் சிலைவளைத்துக் கண்ணம்பென்னுள்ளம், உருவத்
துரந்தா ரொருவர்" என வருவதும் காண்க.
                                                    (14)

 
      கோயில் புகுந்து விசுவநாதரை வணங்குதல்   
921. அன்னவை பலகண் டேகி அணிமணிக் கோயி னண்ணி
நன்னதி புனைந்த சென்னி நாயகன் விசுவ நாதன்
சந்நிதி தன்னிற் சென்னி தரையுற வணங்கிப் போந்து
மன்னவர் பெருமா னங்கோர் மணிமுடிப் பொதியில் சேர்ந்தான்.

     (இ - ள்.) அன்னவை பல கண்டு ஏகி - அத்தகைய பல
காட்சிகளைக் கண்டு சென்று, அணி மணிக் கோயில் நண்ணி - அழகிய
மணிகள் பதிக்கப்பெற்ற கோயிலை அடைந்து, நன்னதி புனைந்து யாற்றைத்
தலையிற் சூடிய விசுவநாதப் பெருமானுடைய திருமுன், சென்னி தரையுற
வணங்கிப் போந்து - தலை தரையிலே படும்படி வணங்கிப் போய்,
மன்னவர் பெருமான் அங்கோர் மணி முடிப்பொதியில் சேர்ந்தான் -
மன்னர் மன்னனாகிய அரிச்சந்திரன் அங்கு ஒரு மணி முடிகளையுயடைய
பொது இடமாகிய அறச்சாலையை அடைந்தான்.

     அரிச்சந்திரன் திருக்கோயில் சென்று கண்டு விசுவநாதரை வணங்கிப்
பின் ஓர் அம்பலம் சேர்ந்தான் என்பது.
                                                    (15)