பக்கம் எண் :


484

வருகின்ற நாளில், பங்கேருகத்து மலர்போல் விளங்கு வதனா - தாமரை
மலர்போல் விளங்கும் முகத்தையுடைய மைந்தனே!, மகிழ்ந்த பரிவால் -
மகிழ்ந்த அன்போடு, எங்கே என் ஆசை மகன் என்று உரைக்கில் எதிர்
ஏது சொல்வன் மகனே - எங்கே என் ஆசைக்குரிய மகன் என்று
கேட்டால் எதிர்மொழி என்ன கூறுவேன்!

     'மைந்தனே! உன்னையும் என்னையும் விலைக்கு விற்ற உன் தந்தை,
பின்னர் விலைப்பொருள் கொடுத்து மீட்ட விரும்பி வந்து 'என் மகன்
எங்கே?' என்று கேட்டால், 'பாவி நான் என்னசொல்வேன்!' என்றும்
புலம்பினாள். 'செங்கோ லறத்தின் . . . . . . விறன்மன்னன்' என்றது
அவன் நீதியையும் அறிவையும் வெற்றியையும் விளக்கியதாம்.
                                                    (24)

 
1001. நீராள வாவி செறிநா டனைத்து
   நிறைமாத வற்கு தவினும்
பாராளு நீர்மை தொடர்பற்ற தன்று
   படியாளும் எந்தை முடியில்
காராள ரேர்கள் கடவோசை யோய்வில்
   கன்னோசி நாட தனைமேல்
ஆராள வல்ல ரவமே வனத்தி
   லரவா லிறந்த மகனே.

       (இ - ள்.) அவமே வனத்தில் அரவால் இறந்த மகனே -
வீணாக காட்டில் பாம்பு கடித்து இறந்த மகனே!, நீர் ஆள வாவி செறி
நாடு அனைத்தும் நிறை மாதவற்கு உதவினும் - நீர் நிறைந்த குளங்கள்
மிகுந்த கோசல நாடு முழுவதையும் முனிவனுக்கு உன் தந்தை
கொடுத்துவிட்டாலும், பார் ஆளும் நீர்மை தொடர்பு அற்ற தன்று - இம்
மாநிலத்தை ஆளும் உரிமைத்தன்மை உன்னை விட்டு நீங்கிவிடவில்லை,
படி ஆளும் எந்தை முடியில் - இந்நிலத்தை ஆளும் என் தந்தை
இறந்தால், காராளர் ஏர்கள் கடவு ஓசை ஓய்வு இல் கன்னோசி நாடு
அதனை - வேளாளருடைய ஏர் செலுத்தும் ஓசை ஓய்தல் இல்லாத
கன்னோசி நாட்டை, மேல் ஆர் ஆள வல்லர் - பிறகு யார்
ஆளவல்லவராக இருக்கின்றனர் (என்றும் புலம்பினள் சந்திரமதி.)

     'மகனே! உன் தந்தை அரசுபுரிந்த நாடு முனிவர்க்கு வழங்கப்படினும்
நீ அரசு புரிவதற்கு என் தந்தை யாளும் கன்னோசி நாடுளதே; அதனை
யாள்வதற்குரியார் யாவர் உளர்? நீ வீணே இறந்தனையே!' என்றும்
புலம்பினால்.
                                                    (25)

 
1002. நல்லோர் வகுத்த முறையா மறங்க
   ணாலெட்டி லொன்று குறையேம்
இல்லோரை யற்ப மிகழோ மிறுக்கு
   மிறையன்றி யேற வுகவேம்
சொல்லோ மறுத்து முரையோ முரைத்த
   துறவோர்கள் புத்தி கடவேம்
எல்லோர் தமக்கு மினிதே விளைப்ப
   மேதாக வந்த் திதுவே.