பக்கம் எண் :


488

1007. மறவா ளெயிற்று மணிமா சுணத்தின்
   வலியா லிறந்து ளவெனோ
டிறவா திருக்கு மதிபாவி தன்னொ
   டுறவே தெனக்க கருதியோ
திறவாய் சிவந்த கனிவா யுரைத்தல்
   செய்கிலாய் முகத்து விழியாய்
பிறவாத நித்த னடியே விழுத்து
   பெருமான் அளித்த மகனே.

     (இ - ள்.) பிறவாத நித்தன் அடியே வழுத்து பெருமான் அளித்த
மகனே - பிறத்தல் இல்லாத எப்பொழுதும் நிலைத்து நிற்பவனான
சிவபெருமானுடைய திருவடிகளை வணங்குகின்ற மன்னன் பெற்ற மகனே!
மறவாள் எயிற்று மணி மாசுணத்தின் வலியால் இறந்துள எனோடு -
வீரமுடன் வாள்போன்ற கூர்மையான பற்களையுடைய மணியைத்
தலையிலே வைத்துள்ள பாம்பின் வலிமையால் இறந்துள்ள என்னோடு,
இறவாதிருக்கும் அதி பாவி தன்னோடு உறவு ஏது எனக் கருதியோ -
இறவாமல் இருக்கின்ற கொடும்பாவியோடு உறவு என்ன என்று
நினைத்தோ, சிவந்த கனி வாய் திறவாய் உரைத்தல் செய்கிலாய் முகத்து
விழியாய் - சிவந்த கனிபோன்ற வாயைத் திறவாய் ஒன்றும் பேசாய்
முகத்திலும் விழியாமல் இருக்கின்றாய் (என்றும் கூறி யழுதாள்.)

     பிறவாத நித்தன் என்பது சிவபெருமானை உணர்த்தியது. பிறப்பும்
இறப்பும் இல்லாதவன் என்பது, 'பாம்பு கடித்திறந்தான் நம் மகன்' எனக்
கேட்டபொழுதே உயிர் நிங்காத பாவி நம் அன்னை; இவளுடனே
நமக்கென்ன உறவென்று நீ கருதியே ஒன்றுமுரையாதிருக்கின்றாய்!'
என்றும் கூறி யழுதாள்.
                                                    (31)

 
1008. வடியேறு வெற்றி நெடுவேன் மலர்க்கை
   மகனோ டிறந்து மடியாக்
கொடியேன் முகத்தில் விழியார் முனிக்கு
   வளநா டளித்த கொடையார்
இடியே றடர்த்த மரமாகி மண்ணி
   னிடையே உழைத்த லழகோ
அடியேனை யொக்க முடியா திருத்த
   லநியாய மிக்க யமனே.

       (இ - ள்.) வடி ஏறு வெற்றி நெடு வேல் மலர்க்கை மகனோடு
இறந்து மடியா - கூர்மையான வெற்றியையுடைய நீண்ட வேலைக் கையில்
பிடித்த மகனோடு இறந்து மடியாத, (கொடியேன் முகத்தில்) முனிக்கு
வளநாடு அளித்த கொடையார் விழியார் - முனிவருக்கு வளமான
நாட்டைக் கொடுத்த கொடைத்தன்மையுடைய மன்னர் கொடிய பாவியாகிய
என் முகத்தில் விழிக்கமாட்டார், இடியேறு அடர்த்த மரமாகி மண்ணின்
இடையே உழத்தல் அழகோ- பேர் இடி தாக்கிய மரம்போல
மண்ணின்மேல் நான் வருந்துதல்