பக்கம் எண் :


490

    சந்திரமதி சுடுகாட்டிற்குச் செல்லுதல்   
1010. காடுமே டும்செறிந்த செந்நாய் முன்னே
   கௌவிஇழுத் திடப்பறந்து கழுகு மோதப்
போடுபோ டெனப்பலபேய் தொடரக் கொண்டு
   போகேனீ யெனக்கொடிய பூதம் சூழ
மாடுதோ றும்பறிக்க நரிக டாவ
   வார்குழலும் சோர்துகிலும் வனந்தொட் டீர்க்க
ஈடுபா டித்தனையும் பட்டு நீண்முள்
   இடுகாடு நீந்திநெடுஞ் சுடுகா டுற்றாள்.

     (இ - ள்.) காடும் மேடும் செறிந்த செந்நாய் முன்னே கவ்வி
இழுத்திட - காடுகளிலும் மேடுகளிலும் நெருங்கிய செந்நாய்கள் முன்னே
கௌவி இழுக்கவும், பறந்து கழுகு மோத - பறந்துவந்து கழுகுகள்
மோதவும், போடு போடு எனப் பல பேய் தொடர - இப் பிணத்தைக்
கீழே போடு போடு என்று பல பேய்கள் தொடர்ந்து செல்லவும், கொண்டு
போகேல் நீ எனக் கொடிய பூதம் சூழ - கொண்டு போகாதே நீ என்று
கொடிய பூதங்கள் சூழ்ந்து செல்லவும், மாடு தோறும் பறிக்க நரிகள் தாவ
- பக்கந்தோறும் பறிக்க நரிகள் தாவிச் செல்லவும், வார் குழலும் சோர்
துகிலும் வனம் தொட்டு ஈர்க்க - நீண்ட கூந்தலையும் தொங்குகின்ற
ஆடையையும் காட்டுச்செடிகள் தொட்டு இழுக்கவும், ஈடு பாடு
இத்தனையும் பட்டு நீள் முள் இடுகாடு நீந்தி நெடுஞ் சுடுகாடு உற்றாள் -
இத்தனை ஈடுபாடுகளிலும் துன்புற்று நீண்ட முள்ளையுடைய இடுகாட்டை
விட்டு நீங்கி நீண்ட சுடுகாட்டை அடைந்தாள்.

     இடுகாடு - பிணங்களைப் புதைக்கும் இடம். சுடுகாடு - பிணத்தைச்
சுடும் காடு - ஈடுபாடு - இடையில் வரும் துன்பம்.

     செந்நாய் கவ்வி இழுத்திடவும், கழுகு மோதவும், பேய் தொடரவும்,
பூதம் சூழவும், நரிகள் தாவவும், சூழலும் துகிலும் வனம் தொட்டீர்க்கவும்,
சந்திரமதி இத்தனையும் பட்டு அச் சுடுகாடுற்றாள் எனக் கூட்டுக.
                                                    (34)

 
  பலவகை அறிகுறிகளாற் சுடுகாட்டினை யறிந்து
         போய்ச் சேர்தல்
  
1011. பிணங்கள்சுடும் கடும்புலைய ரரவத் தாலும்
   பிளந்துதலை வெடித்திடுபே ரமலை யாலும்
நிணங்கருகிச் சுறுநாறு முடையி னாலும்
   நெடுங்கனலின் கொழுந்தெழுந்த நிவப்பி னாலும்
கணங்கள்மிகக் களித்தாடுந் துழனி யாலும்
   கனற்பொறியின் மலிவாலும் புகையி னாலும்
சுணங்குபல பிணங்குபெருங் குரைப்பி னாலும்
   தோகைஅறிந் துணர்ந்துகொடுஞ் சுடலை சாாந்தாள்.