பக்கம் எண் :


531

     'இவளை விற்றவன்இவனாகிலும் பசுவைக் கொலைசெய்யும் புலையன்
இவன், இவளையும் கொல்லாமல் விடமாட்டான்' என்பர் சிலர்; 'விற்றவன்
வெட்டுவானா? காணாத இடத்திற்குக் கொண்டுபோய்க் கொல்லாமல்
விட்டுவிடுவான் ஆதலால், நாம் தொடர்ந்துபோய்ப் பார்க்கவேண்டும்'
என்று கூறித் தொடர்வார் சிலர். சிலர் அவளைக் கட்டிய கயிற்றை அவன்
பிடித்துச்செல்வதுபோலத் தாமும் பிடித்துச் செல்வார்.
                                                   (117)

 
1094. தனியாய பாவிகுறை எவர்போய் உரைத்திடுவர்
   தருமா லயப்புர வலன்
அனியாய மென்றுசிறி(து) உணராதொர் பெண்பழியை
   அவமே கொளக்க ருதினான்
இனியார் இரங்குபவர் எனவே யலைந்துவயி(று)
   எரியா வுலைந்து சுழல்வார்
கனிவாய் புலர்ந்துநிலை தளர்வார் கலங்கியுடல்
   கரைவார் புலம்பி யழுவார்.

       (இ - ள்.) தனியாய பாவி குறை எவர் போய் உரைத்திடுவர் -
யாரும் ஆதரவற்ற பாவியாகிய இவளுடைய குறையை யார் போய்
உரைப்பார்கள், தரும ஆலயப் புரவலன் - தருமத்துக்கு உறைவிடமாகிய
மன்னன், அநியாயம் என்று சிறிது உணராது - இவளைக் கொல்வது
நீதிமுறைக்குத் தவறு என்று சிறிதும் அறியாமல், ஓர் பெண் பழியை
அவமே கொளக் கருதினான் - ஒரு பெண்ணினுடைய பழியை வீணாகக்
கொள்ளக் கருதியிருக்கின்றான், இனி யார் இரங்குபவர் எனவே அலைந்து
- இனிமேல் இரக்கங்கொள்வதற்கு யார் இருக்கின்றார்கள் என்று வருந்தி,
வயிறு எரியா உலைந்து சுழல்வார் - வயிறு எரிந்து வருந்தி மனம்
தளர்வார், கனி வாய் புலர்ந்து நிலை தளர்வார் கலங்கி உடல் கரைவார்
- கனிபோன்ற வாய் காய்ந்து நிலை தளர்வார்கள் மனங் கலங்கி உடல்
இளைப்பார்கள், புலம்பி அழுவார் - புலம்பி வாய்விட்டு அழுவார்கள்.

     'ஆதரவில்லாத பாவி இவள் குறையை அரசனுக்குப் போய்க்
கூறுவார் யார்?' என்று காசிநகர மக்கள், வயிறெரிந்து அலைந்து உலைந்து
சுழல்வார்; வாய் புலர்வார்; நிலை தளர்வார்; மனம் கலங்குவார்; கரைவார்;
புலம்பியழுவராயினர் என்க.
                                                   (118)

1095. வல்லோர்கள் வல்லபடி சொல்வார்கள் மன்னுமிறை
   மருமானை இவள்கொன் றவா(று)
இல்லாத போதிவளை வறிதே வதைத்தபழி
   யார்பால தென்று பகர்வார்
கொல்லாது வன்சிறையில் வைத்தே விளங்கினிவள்
   கொலைதான் வதைத்திடு தலாம்
அல்லாது விட்டிடலும் அறமாகும் என்னஅவர்
   அவரோ(டு) உரைத்துழ லுவார்.