பக்கம் எண் :


559

     'உன் மனைவி மைந்தனை ஒரு மறையவனுக்கு விற்றதாகவும்,
அதனை இழிவாகவும் கூறினை! நானே மறையவனாக வந்து விலைக்கு
வாங்கினேன்! நீ எழுதிக்கொடுத்த ஆவணம் இது காண்! தீத் தெய்வமாகிய
எனக்கு விற்றதும் இழிவாகுமோ? உயர்வாகும்!' என்று உண்மையை
விளக்கினன் அக்கினிபகவான்.
                                                    (35)

 
   வீரவாகு இயமனாக வெளிப்படல்
1148. காலனவ் வளவிற் கருங்கடா வேறிக்
   கருமுகிற் கப்புவிட் டனைய
கோலமுஞ் சிவந்த கண்களும் நிவந்த
   குஞ்சியுங் குண்டலக குழையும்
சூலமுங் கால தண்டமும் பணைத்த
   தோள்களும் மார்பமும் துலங்க
மூலமாம் முதலை நோக்கிவீழ்ந் திறைஞ்சி
   முகமலர்ந் தரசன்முன் மொழிவான்.

       (இ - ள்.) காலன் அவ்வளவில் கருங்கடா ஏறி - இயமன்
அந்த வேளையில் கருமையான எருமைக்கடாவின்மேல் ஏறிக்கொண்டு,
கருமுகில் கப்பு விட்ட அனைய கோலமும் - கரிய மேகமானது
கிளைவிட்டு வளர்ந்தது போன்ற கை கால்களுடன் கூடிய வடிவும், சிவந்த
கண்களும் நிவந்த குஞ்சியும் குண்டலக் குழையும் - சிவப்புநிறமான
கண்களும் நீண்ட தலைமயிரும் குண்டலமாகிய காதணிகளும், சூலமும்
கால தண்டமும் பணைத்த தோள்களும் மார்பமும் துலங்க - சூலாயுதமும்
காலதண்டம் என்னும் கருவியும் பருத்த தோள்களும் மார்பும் விளங்க,
மூலமாம் முதலை நோக்கி வீழ்ந் திறைஞ்சி முகம் மலர்ந்து அரசன் முன்
மொழிவான் - உலகங்களுக்கெல்லாம் மூலகாரணமாயும் முதற்பொருளாயும்
உள்ள சிவபெருமானை நோக்கி வீழ்ந்து வணங்கிப் பின்பு
முகமலர்ச்சியுடன் அரசன்முன் மொழியத் தொடங்கினான்.

     அப்பொழுது இயமன் எருமைக் கடாவிலேறி வந்து நின்று தன்
வரலாற்றை விளக்குகின்றான் சிவபெருமான் திருமுன்னா என்பது.
                                                    (36)

 
           இயமன் கூற்று
1149. அலைகடற் புவியில் புலையருக் கடிமை
   யாவையென் பதுமுதல் அறிந்து
புலையனாய்ப் பிறந்து கொண்டவன் யானே
   பொறித்துநீ தந்தஆ வணமீ(து)
இலைகுலாந் தொடையாய் இருந்துநீ காத்த
   ஈமமும் யாகசா லைகள்காண்
தொலைவிலா வடுவென் றுணரின்நீ இகழ்ந்த
   சுடலையைப் பாரென உரைத்தான்.