பக்கம் எண் :


564

     இந்திரன் 'அரிச்சந்திரனுக்கு முடிசூட்டுவித்துப் பின் செல்லலாம்'
என்று தங்கினன்; தேவர்களும் ஆங்கிருந்தனர் என்க.
                                                    (43)

 
  காசியில் இந்திரன் முதலிய தேவர்கள் தங்குதல்
1156. காசிபன் பிருகு ரோமன் கௌதமன் பரத்து வாசன்
கோசிகன் வசிட்டன் சன்னு குறுமுனி மரீசி யாதி
ஆசில்நா ரதன்ம தங்கன் அத்திரி முதலோர் சூழக்
காசியில் இனிதி ருந்தார் கழிந்தது கங்குற் போது.

       (இ - ள்.) காசிபன் பிருகு ரோமன் கௌதமன் பரத்துவாசன் -
காசிப முனிவரும் பிருகு ரோமன் கௌதமன் பரத்துவாசன் என்னும்
முனிவர்களும், கோசிகன் வசிட்டன் சன்னு குறுமுனி மரீசி -
விசுவாமித்திரன் வசிட்டன் சன்னு முனிவன் குறுமுனி மரீசி
முதலானவர்களும், ஆசு இல் நாரதன் மதங்கன் அத்திரி முதலோர் சூழ
- குற்றமில்லாத நாரதன் மதங்கன் அத்திரி முதலானவர்களும் ஒன்று
சேர்ந்து, காசியில் இனிது இருந்தார் கழிந்தது கங்குல் போது - காசிமா
நகரத்தில் மகிழ்ந்து இருந்தனர்; இரவுப்பொழுது நீங்கியது.

     காசிபன் முதலிய முனிவர்களனைவரும் காசிநகரில் அன்றிரவு
தங்கினர்; இரவு விடிந்தது.
                                                    (44)

 
  அனைவரும் அயோத்திக்குப் புறப்பட்டுச் செல்லுதல்   
1157. கழிந்தது கங்குற் போது கழிதலும் காசி வேந்தன்
மொழிந்தனன் விரைவின் அந்த முரட்படை எழுக என்னாச்
செழுந்தட முரசம் எங்கும் அறைந்திடத் திசைகள் தோறும்
எழுந்தன தேரும் மாவும் யானையுஞ் சேனை தானும்.

     (இ - ள்.) கழிந்தது கங்குல் போது - இரவுப்பொழுது நீங்கியது,
கழிதலும் காசி வேந்தன் விரைவின் அந்த முரண் படை எழுக என்னா
மொழிந்தனன் - இரவுப்பொழுது நீங்கியவுடன் காசிநகரத்துமன்னன்
விரைவாகத் தன்னுடைய வலிய படைகளெல்லாம் புறப்படுக என்றான்,
செழுந் தடம் முரசம் எங்கும் அறைந்திட - வளமான பெரிய முரசங்கள்
எங்கும் ஒலிக்க, தேரும் மாவும் யானையும் சேனை தானும்
திசைகள்தோறும் எழுந்தன - தேரும் குதிரையும் யானையும் சேனைகளும்
திசைகளில் எல்லாம் எழுந்தன.

     காலையிற் காசி மன்னன் தன் படைகள் அயோத்தி நகருக்குப்
புறப்படவேண்டும் என்று பறையறைவித்தான். யானை முதலிய சேனைகள்
எழுந்தன என்க.
                                                    (45)

 
1158. கரிபரி யீட்டத் தோடும் கணமணித் தேரும் தாரும்
தெரிவையர் குழாமும் செம்பொற் சிவிகையும் கவிகை தானும்
விரிபெருந் தூளி யார்க்க வெண்கொடிப் படலம் மூடச்
சரிபெருங் கடல்கள் போல்வந் தரசனைச் சார்ந்த வன்றே.