பக்கம் எண் :


583

     கவுசிகன் நூறு ஆண் மக்களைப்பெற்று ஆயுதப்பயிற்சியில் வலிய
வர்களாக்கி வளர்த்தான். ஒருநாள் அவன் தன் நூறு மக்கள், யானை
முதலிய படைகள் சூழ வேட்டை நாய்களைக் கூட்டி வேட்டைக்கு
வந்தான்.
                                                     (6)

1196. கரியினமும் புலியினமும் வெருளா வோடக்
   கலைகடமை யுழைமடியக் கணைகள் தூவி
எரிபரப்பி வனமடங்க அழிய நூறி
   இருடிகள்தம் சூழலெலாம் பாழா கச்செய்(து)
அரியினமும் குறுமுயலும் அகலா வண்ணம்
   அயில்வேலும் குணிலுமெறிந் தனைத்துங் கொன்று
தெரிபடுசெந் தசைவெதுப்பித் தின்று தங்கிச்
   சிலநாள்கா னகத்துறைந்து திரியும் நாளில்.

       (இ - ள்.) கரி இனமும் புலி இனமும் வெருளா ஓட - யானைக்
கூட்டங்களும் புலிக்கூட்டங்களும் வெருண்டு ஓடவும், கலை கடமை
உழை மடிய கணைகள் தூவி - கலைமான் கடமான் புள்ளிமான்கள்
மடிந்து போக அம்புகளைச் செலுத்தி, எரி பரப்பி வனம் அடங்க அழிய
நூறி - நெருப்பைக்கொளுத்தி காடு முழுவதும் அழியும்படி செய்து,
இருடிகள் தம் சூழலெல்லாம் பாழாகச் செய்து - முனிவருடைய
இருப்பிடங்களையெல்லாம் பாழாகும்படி செய்து, அரி இனமும் குறு
முயலும் அகலா வண்ணம் - சிங்கக்கூட்டங்களும் சிறிய முயல்
கூட்டங்களும் அகன்று ஓடிவிடாதபடி, அயில் வேலும் குணிலும் எறிந்து
அனைத்தும் கொன்று - கூர்மையான வேல்களையும் வளை தடிகளையும்
எறிந்து எல்லாவற்றையும் கொன்று, தெரிபடு செந்தசை வெதுப்பித் தின்று
தங்கி - சுவை நன்றாக அறிந்த செந்தசைகளை வெதுப்பி வாட்டித் தின்று
தங்கி, சிலநாள் கானகத்துறைந்து திரியும் நாளில் - சில நாட்கள்
காட்டின்கண் உறைந்து திரிந்துகொண்டிருந்த நாட்களில்;

     இச் செய்யுள் குளகம். விலங்குகளில் தமக்கு விருப்பமானவற்றின்
இறைச்சியையே உண்பர். ஆதலின் 'தெரிபடு செந்தசை' என்றார்.
வெருளா ஓட - வெருண்டு ஓட; வெருளா : செய்யா என்னும் வாய்பாட்டு
வினையெச்சம். அகலாவண்ணம் - நீங்காதபடி; அகலா : ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம்.
                                                     (7)

 
1197. ஒருஞான்று புலரிதனில் எழுந்து போகி
   உயர்வரைகள் தோறுமுழன் றொன்றும் இன்றி
வருநாளில் அவ்விடத்தோர் மானின் பின்போய்
   வாய்புலர்ந்து நாவுலர்ந்து காலும் ஓய்ந்து
பெருநாண மும்பசியும் தவிப்பு மாகிப்
   பின்பிடித்த விலங்கைவிட்டுத் துன்பம் எய்தி
தருநீழல் தன்னிலியான் இனிது வைகித்
   தவம்புரியும் மலைச்சாரல் தன்னிற் சார்ந்தான்.