பக்கம் எண் :


68

     (இ - ள்.) சந்திரகலையால் நெக்கு நீர் பொழிவ சந்திரகாந்தமே
அல்லால் - சந்திரன் ஒளிக்கதிரில் உருகிக் கரைந்து நீர் சிந்துவது
சந்திரகாந்தக் கல்லே யல்லாமல், அந்தர சாதிச் சிலையின் உண்டாகாது -
வேறுவகைக் கல்லில் உண்டாகாது (அதுபோல), அவள் இவன் மனைவி
என்று அயனார் முந்தவே விதித்த விதியினால் அடங்கா மோகமும்
தாகமும் மிகுந்து புந்தி கெட்டு அறிவு நிறை பொறை தோற்றம்
போக்கினான் யாக்கையும் தளர்ந்தான் - அந்தச் சந்திரமதி இவனுடைய
மனைவி என்று பிரமன் முன்னமே விதித்துள்ள முறையினால் அடக்க
முடியாத மோகமும் வேட்கையும் மிகுந்து புத்தி கெட்டு அறிவு அடக்கம்
பொறுமை தோற்றப்பொலிவு இவை நீங்கப்பெற்று உடலுந்
தளர்ச்சியடைந்தான்.

     எடுத்துக்காட்டுவமை அணி. போக்கினான் : முற்றெச்சம். காந்தமே,
ஏகாரம் : பிரிநிலை. அடங்கா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்;
மோகமும் தாகமும் : எண்ணும்மை; யாக்கையும் : இறந்தது தழீஇய எச்ச
உம்மை. காந்தமே : பால்பகா அஃறிணைப்பெயர்.
                                                    (20)

 
  மன்னவன் முனிவரை மணஞ்செய்விக்க வேண்டுவது
125.

கரையழி காத லாற்றை அறிவெனும் கரைசெய் தாற்றி
வரையன புயத்து மன்னன் முனிவரை நோக்கி மாதர்க்
கரசியை யடிய னேனுக் கணிமணம் புணர்க்க நும்வாய்
உரையுள தாயின் என்மாட் டுயிருள தாகும் என்றான்.

    (இ - ள்.) வரை அன புயத்து மன்னன் - மலைபோன்ற தோள்களை
யுடைய அரசன், கரை அழி காதல் ஆற்றை அறிவு எனும் கரை செய்து
ஆற்றி - கரையை உடைத்துச் செல்வதாகிய காதல் ஆற்றை அறிவு
என்னும் கரை போட்டு அடக்கி, முனிவரை நோக்கி - முனிவரைப்
பார்த்து, மாதர்க்கு அரசியை அடியனேனுக்கு அணி மணம் புணர்க்க -
பெண்ணரசியாகிய சந்திரமதியை அடியேனுக்கு அழகிய திருமணஞ்
செய்து சேர்த்துவைப்பதாக, நும் வாய் உரை உளதாயின் - உமது திருவாய்
மலர்ந்து சொல்லுவீரானால், என் மாட்டு உயிர் உளதாகும் என்றான் -
எனது உடலில் உயிர் இருக்கும் என்று சொன்னான்.

     உரை செய்யீராயின் உயிர்போம் என்பது குறிப்பெச்சம். வரை -
வரையுடைய மூங்கிலுக்கு ஆகிப் பின் மூங்கில் வளரும் மலைக்கு ஆயின
மையின் இருமடி ஆகுபெயர். உரை யென்றாலே அமையும், வாய் உரை
என்றது தீயசொற் பயிலா வாய் என்ற சிறப்புப்பற்றி வந்தது. காதல் எல்லை
கடவாதபடி தனது அறிவால் அடக்கினான் அரிச்சந்திரன் என்பதாம்.
காதலை ஆறாகவும் அறிவைக் கரையாகவும் உருவகஞ் செய்தமையின்
உருவக அணி.
                                                    (21)

    'யாம் செய்யும் உதவி யாது?' எனக் கேட்டல்  
126. அங்கண்மா ஞாலம் காக்கும் அரசனே அரச ரேறே
திங்கண்மா முகத்து வாமத் திருவைநீ வதுவை சூட்ட
வெங்களாற் செய்யு மாறே தியம்பென முனிவர் கூற
செங்கண்மால் அனையான் செவ்வாய் செங்கையாலபுதைத்துச்
                                       [செப்பும்.