பக்கம் எண் :


73

     என் உள்ளங் கொள்ளைகொண்ட ஆறலை கள்வன்போன்ற உன்னை
விடாது பிடித்து என் மனச்சிறையில் வைப்பேன் என்பதாம். இதுவும்
சந்திரமதியைச் சிறப்பித்தற்கண் உள்ளங்கவர் அழகினள் என்பதை
மறுத்து உள்ளங் கொள்ளைகொள்ளும் கள்ளி எனக் கூறுதலின் குண
அவநுதி அணி.

     வாகை மரத்தின் பெயர் பூவுக்காய் மாலைக்காய்ப் பின் வாகை
மாலை யணியும் வெற்றிக்காதலின் மும்மடி ஆகுபெயர்.
                                                    (30)

 
135. மைதிகழ் வாரி சூழும் மாநிலத் தோர்கட் கெல்லாம்
பெய்தவம் பழிபி றங்காப் பிள்ளையைப் பெறுதல் என்பார்
செய்தவம் அன்றுன் தாதை சன்னங்கள் தோறும் செய்த
கைதவம் ஆவி கொள்ளும் களவினிற் பயந்த தெல்லாம்.

     (இ - ள்.) மை திகழ் வாரி சூழும் மாநிலத்தோர்கட்கு எல்லாம்
பெய் தவம் பழி பிறங்காப் பிள்ளையைப் பெறுதல் என்பார் - கருமையாக
விளங்குகின்ற கடல்சூழ்ந்த பெரிய உலகில் வாழ்பவர்க்கெல்லாம் நன்மை
பயக்கின்ற தவமாவது பிறரால் பழிக்கப்படாத நற்குணமுடைய பிள்ளையைப்
பெறுதல் என்று சொல்வார்கள், உன் தாதை செய் தவம் அன்று - (நீ
பிறந்தது) உன் தகப்பனார் செய்த தவத்தினால் அன்று, ஆவி கொள்ளும்
களவினிற் பயந்தது எல்லாம் - உயிரையே கொள்ளை கொள்ளும்
கள்ளத்தனத்தில் உன்னைப் பெற்றதெல்லாம், சனனங்கள் தோறும் செய்த
கைதவம் - பிறவிதோறும் உன் தந்தை செய்த வஞ்சகத்தாலானதாகும்
(என்றான்).

     இதுவும் குண அவநுதி அணியாகும். மாநிலம் : உரிச்சொற்றொடர்.

     "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
        பண்புடை மக்கள் பெறின்"
     "மகன் உரைக்கும் தந்தை நலத்தை"
     "மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்"
     "தக்கார் தகவில ரென்ப(து) அவரவர்
        எச்சத்தாற் காணப் படும்"

என்ற ஆன்றோர் வாக்குகளான் இவ்வுண்மை உணர்க.

     பயந்த தெல்லாம் : ஒருமைப்பன்மை மயக்கம். பிறங்கா : ஈறு
கெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். செய் தவம் : வினைத்தொகை.
                                                    (31)

 

    'அருகுமோ பெருகுமோ காமநோய்' என மயங்குதல்
136. மாறுகொண் டனைய வல்லி வாட்டிய வாட்டம் சொல்லி
ஆறுதற் கென்பால் நண்ணி அணையுமோ அணைகி லாமல்
வேறுமிப் படியே வாதை விளைக்குமோ விளைக்கும் வாதை
ஏறுமோ குறையு மோவென் றிருந்தனன் இறைவன் இப்பால்.