பக்கம் எண் :


77

    அரிச்சந்திரன் மாட்சியும் விழைவும் கூறுதல்
143. மன்னாகேள் சென்ற யோத்தி மாநகர் புகுந்து யாங்கள்
அந்நகர்க் கரசன் நீதி அருளரிச் சந்த்ரன் என்பான்
நின்நகர் வளமும் நின்தன் நெறியுநின் மகள்தன் னேரும்
சொன்னபின் நின்பால் எய்தும் உவகையே துணிந்து நின்றான்.

     (இ - ள்.) மன்னா கேள் - அரசனே கேட்பாயாக!, யாங்கள்
சென்று அயோத்தி மா நகர் புகுந்து - நாங்கள் புண்ணிய நீராடிச் சென்று
அயோத்திமாநகர் அடைந்து, அந்நகர்க்கு அரசன் நீதி அருள்
அரிச்சந்திரன் என்பான் - அந்த அயோத்திமாநகர்க்கு அரசனாகிய
நீதியும் அருளுமுடைய அரிச்சந்திரன் என்பவனிடத்தில், நின் நகர்
வளமும் நின் தன் நெறியும் நின் மகள் தன் ஏரும் சொன்ன பின் -
உனது நகரின் வளமையையும் உனது அரசியல் முறைமையையும் என்
மகளுடைய அழகினையும் உரைத்தபின். நின்பால் எய்தும் உவகையே
துணிந்து நின்றான் - அவன் உன்னிடம் வந்து அடையும் மகிழ்ச்சியையே
செய்யவேண்டிய கருமமாக எண்ணித் துணிந்தவ னானான்.

     மாநகர் : உரிச்சொற்றொடர்; நீதி அருள் : உம்மைத்தொகை;
உம்மைகள் எண்ணுப்பொருள். "நின் மகள் தன் நேரும்" எனப் பிரித்து
உன் மகளுடைய நேர்மையையும் எனப் பொருள் கூறினும் பொருந்தும்.
'நின்பால் எய்தும் உவகையே' என்றது குறிப்பால் 'நின் மகளை
மணம்புரியக் கருதுகின்றான்' என்பதை விளக்கியது.
                                                    (39)

 
  'சந்திரவதியின் மணவினை முடிக்க வந்தனம்' என்றல்
144.

அறநெறி மிக்கோர் தம்பால் அருந்ததிக் கற்பி னாளைப்
புறநெறி போகாவண்ணம் வருந்தியும் பொருந்தச் செய்தல்
மறநெறி அன்று மாயா மாதவந் தன்னின் மிக்க
திறநெறி அதனால் நின்பால் சேர்ந்தனம் செல்வ வென்றார்.

     (இ - ள்.) செல்வ ! - செல்வங்களெல்லாம் நிறைந்த அரசனே !,
அருந்ததிக் கற்பினாளை - அருந்ததியின் கற்பினைப்போன்ற கற்புடைய
சந்திரமதியை, அறநெறி மிக்கோர் தம்பால் பொருந்தச் செய்தல் -
அறநெறியிற் சிறந்தவரிடத்தில் திருமணப் பொருத்தத்தால் சேரச் செய்தல்,
மறநெறி அன்று - பாவமல்ல, வருந்தியும் புறநெறி போகா வண்ணம் மாயா
மாதவந் தன்னின் மிக்க திறநெறி - கடவுள் நெறியினின்று புறத்தே
செல்லாது வருத்தப்பட்டு மனத்தை அடக்குந் தன்மை வாய்ந்த அழியாப்
பெருந்தவத்தினும் மிகுந்த உறுதிபயக்கும் நெறியாகும், அதனால் நின்பால்
சேர்ந்தனம் என்றா - அந்த நோக்கத்தோடு திரும்பவும் உன்னிடம் வந்து
சேர்ந்தோம் என்றார்கள்.

     அருந்ததிக் கற்பினாள் : உவமைத்தொகை. தக்காரைத் திருமணஞ்
செய்துவைத்தல் முனிவரும் மேற்கொள்ளத்தக்க சிறந்த நெறி யென்பதாம்.
மாதவந்தன்னின் : ஐந்தாம்வேற்றுமை உறழ் பொருவில் வந்தது.
சேர்ந்தனம் : தன்மைப்பன்மை வினைமுற்று.
                                                    (40)