பக்கம் எண் :


80

செழுங்குடை மன்ன ரெல்லாம் தேசமும் நகரும் நீங்கி எழுங்கடல் வளைந்த தென்ன ஈண்டிவந் தடைந்தார் அன்றே.

     (இ - ள்.) தொழுங் கழல் மன்னர் மன்னன் தூதர் சென்று உரைத்த
போதே - மன்னர் முடி தோய்ந்து வணங்கத்தக்க வீரக்கழல்களையணிந்த
பேரரசனாகிய சந்திரதயனுடைய தூதர்போய்ச் சுயம்வர நாள் சொன்ன
உடனேயே, அழுங்கிய ஆசையோடும் அளவிலா உவகையோடும் - மிகவும்
வருத்துகின்ற ஆசையோடும் மட்டற்ற மகிழ்ச்சியோடும், செழுங் குடை
மன்னர் எல்லாம் தேசமும் நகரும் நீங்கி - செழுமையான வெண்கொற்றக்
குடையையுடைய அரசர் எல்லாம் நாடும் நகரும் விட்டு, எழுங் கடல்
வளைந்தது என்ன ஈண்டி வந்து அடைந்தார் - பொங்கி எழுகின்ற கடல்
வளைந்ததுபோல் கூடி வந்து சேர்ந்தார்கள்.

     அன்று, ஏ : அசைகள், கழல் : தானியாகுபெயர். எழுங் கடல் :
பெயரெச்சத்தொடர். தொழுங் கழல் என்பதுமது. என்ன : உவம உருபு.
சுயம்வரம் அறிந்தமைபற்றி உவகை. சந்திரமதியை மணக்க வேண்டும்
என்ற ஆசை, எண்ணம் நிறைவுறுமோ நிறைவுறாதோ என்ற வருத்தம்
இவைகளுடன் வந்தடைந்தார் என்க.
                                                    (45)

       மன்னர் படைகள் வந்து தங்குதல்
150. சோலைக டோறும் நன்னீர்ச் சூளிகை தோறும் தேவர்
ஆலயம் தோறும் மாதர் அரங்குகள் தோறும் மாட
மூலைக டோறும் சீர்சான் முன்றில்கள் தோறும் ஏம
சாலைக டோறும் மன்னர் தானைவந் திறுத்த தன்றே
.

     (இ - ள்.) சோலைகள் தோறும் நன்னீர்ச் சூளிகை தோறும் தேவர்
ஆலயம் தோறும் மாதர் அரங்குகள் தோறும் - அயோத்தி நகரின்
சோலைகள் நல்ல தண்ணீர் நிறைந்த குளக்கரைகள் கோயில்கள்
பெண்களின் ஆடல் அரங்குகள் இவைகளிலும், மாடம் மூலைகள் தோறும்
சீர் சால் முன்றில்கள் தோறும் - மாடங்கள் மூலைமுடுக்குகள் சிறப்பு
நிறைந்த முற்றங்கள் இவைகளிலும், ஏம சாலைகள் தோறும் - காவல்
மிகுந்த சாலைகளிலும், மன்னர் தானை வந்து இறுத்தது - அரசர்களின்
சேனைகள் வந்து தங்கின. அன்று, ஏ : அசை.

     தோறும் : எண்ணிடைச்சொல். சூளிகை - நீர்க்கரை ஏம சாலை -
பொற்களஞ்சியமும் ஆம். மன்னர் நெருக்கமாக வந்து கூடினர். இருக்க
இடமின்றிப் பொற்களஞ்சியத்தினும் புகுந்து தங்கினர் எனக் கொள்க.
                                                    (46)

 
151. மானைவென் றடருங் கண்ணாள் மணமகன் வருமுன் வந்த
ஏனைய வேந்தர்க் கெல்லாம் இமையவர்க் கறிய வொண்ணா
யானையும் தேரு மாவும் மாதரும் அமைச்சர் தாமும்
சேனையும் அளவிட் டார்க்கும் செப்பலாந் தகைமைத் தன்றே.