பக்கம் எண் :


83

செல்க என்னா மொழிந்து - அரசர்களும் மந்திரிகளும் சேனைகளும்
பெண்களும் முன்னமே செல்க என்று கூறி, சூதனைக் கண் சாத்தி -
தேர்ப்பாகனை நோக்கி, வன்ன மா மணித் தேர் கொண்டு வருக என
அருளிச் செய்தான் - 'அழகுபொருந்திய பெரிய மணிகள் ஒலிக்கின்ற
தேரைக் கொண்டு வருக' என்று குறிப்பாற் கட்டளையிட்டான்.

     முன்னர், அர் : பகுதிப்பொருள் விகுதி; கன்னல் + அம் - அம் -
அழகு : சாரியையும் ஆம். என்னா - என்று கூறி. வருக + என =
வருகென அகரங் குறைந்துநின்றது : தொகுத்தல் விகாரம். அருளிச்
செய்தான். கூறினான் இது உயர்ந்தோர்கள் செயலைக் கூறு முறை.
                                                    (51)

   பாகன் தேர் கொண்டு வருதல்

     கலி விருத்தம்
156. மாதங் கம்மடங் கல்வயப் பரிமா
பூதம் பலதே ரொடுபூண நிறீஇச்
சூதன் கொடுவந் துசுடர்க் கழலோன்
பாதங் களின்மீ துபணிந் தனனே.

     (இ - ள்.) சூதன் மாதங்கம் மடங்கல் வயப் பரி மா பூதம் பல
தேரொடு பூண நிறீஇ - தேர்ப்பாகன் யானைகளையும் பல சிங்கங்களையும்
அநேகம் வெற்றிபொருந்திய குதிரைகளையும் பல பூதங்களையும் அந்தத்
தேரிலே பூட்டியும் அணிபெறக் கட்டி நிறுத்தியும், கொடு வந்து - கொண்டு
வந்து, சுடர்க் கழலோன் பாதங்களின் மீது பணிந்தனன் - ஒளிபொருந்திய
வீரக்கழல்கள் அணிந்த அரிச்சந்திரன் அடிகளில் விழுந்து வணங்கினான்.

     குதிரைகளைப் பூட்டியும் ஏனையவற்றின் உருவங்களை வரைந்து
காட்டியும் அழகுபெறத் தேரில் நிறுத்தியும் எனக் கொள்க; கொடு :
தொகுத்தல், ஏகாரம் : ஈற்றசை. சூதன் - தேர்ப்பாகன். மாதங்கம் -
யானை, மடங்கல் - சிங்கம்.
                                                    (52)

 

  அரிச்சந்திரன் தேரேறிச் செல்லல்
157. வாரே றுசெழுந் தடமா முரசும்
நீரே றியசங் கமுநின் றதிரத்
தாரே றுபுயங் கள்ததும் பநெடும்
தேரே றிவிரைந் துசெலுத் தினனே.

     (இ - ள்.) வார் ஏறு செழுந் தட மா முரசும் - தோல் வாரால்
இறுகக் கட்டப்பட்ட பேரொலி முழங்கும் பெரிய முரசும், நீர் ஏறிய
சங்கமும் - மங்கலத்தன்மை மிகுந்த சங்கும், நின்று அதிர - நெடுநேரம்
முழங்க, தார் ஏறு புயங்கள் ததும்ப - மாலைகள் மிகுந்த தோள்கள்
அசைய, நெடுந் தேர் ஏறி விரைந்து செலுத்தினன் - பெரிய தேர் மேல்
ஏறி விரைவாகச் செலுத்தினான்.