பக்கம் எண் :


87

  வெண் சாமரையும் வெண்டுகிற் கொடியும்
165. ஆதித் தனருங் குலமன் னவர்தந்
நீதிப் புகழெங் குநிறைந் ததெனச்
சோதிக் கவரித் தொகையுங் கொடியும்
வீதித் தலைதோ றுமிடைந் தனவால்.

     (இ - ள்.) ஆதித்தன் அருங் குல மன்னவர் நீதிப் புகழ் எங்கும்
நிறைந்தது என - சூரியயகுல மன்னரின் நீதியின் புகழ் எங்கும் பரவியது
போல, வீதித் தலை தோறும் சோதிக் கவரித் தொகையும் கொடியும்
மிடைந்தன - இவர்கள் போகின்ற தெருக்களிலெல்லாம் ஒளிபொருந்திய
சாமரைக் கூட்டமும் கொடிகளும் நெருங்கின.

     உவமையணி. ஆல் : அசை; நீதிப்புகழ் : ஏதுப்பொருட்கண் வந்த
ஐந்தனுருபு தொக்கது.
                                                     (61)

 
  பரி கரி தேர்ப் படைச் சிறப்பு
166.

காற்றோ டுநிகர்த் தகடும் பரிவா
னேற்றோ டுநிகர்த் தனயா னைவரைக்
கூற்றோ டுநிகர்த் தனதேர் குலவும்
ஆற்றோ டுநிகர்த் தவனீ கமரோ.

     (இ - ள்.) கடும் பரி காற்றோடு நிகர்த்த - வேகமுடைய குதிரைகள்
காற்றைப்போன்றன, யானை வான் ஏற்றோடு நிகர்த்தன - யானைகள் கரிய
தோற்றத்தாலும் பெரு முழக்காலும் மேகத்தையும் அதன் முழக்கத்தையும்
போன்றன. தேர் வரைக் கூற்றோடு நிகர்த்தன - தேர்கள் உயரத்தாலும்
உருவத்தாலும் மலைகளின் சரிவுகளை ஒத்திருந்தன, அனீகம் குலவும்
ஆற்றோடு நிகர்த்த - சேனைகள் ஓட்டமுற்று விளங்குகின்ற ஆறுகளை
ஒத்திருந்தன.

     அரோ : அசை; சேனைகளின் ஒழுங்கான போக்கிற்கு
ஆற்றொழுக்கும், தேர்களின் அகன்ற அடிக்கும் ஒடுங்கிய உச்சிக்கும்
மலையும் சிறந்த உவமைகள் ஆயின.
                                                    (62)

 
  மழு வாள் முதலிய ஆயுத வரிசை
167. மழுவும் கரவா ளமும்வார் சிலையும்
எழுவும் குலிசங் களுமே திகளும்
கொழுவும் வளையும் பலகுந் தமுநீண்
முழுவெஞ் சுடர்வேல் களுமொய்த் தனவால்.

     (இ - ள்.) மழுவும் கர வாளமும் வார் சிலையும் எழுவும்
குலிசங்களும் - மழுப் படைகளும் கை வாள்களும் நீண்ட விற்களும்
தூண் போன்ற தண்டங்களும் வச்சிராயுதங்களும், ஏதிகளும் கொழுவும்
வளையும் பல குந்தமும் நீள் முழு வெஞ் சுடர் வேல்களும் மொய்த்தன
- வாளும் கொழுக்களும் சக்கரங்களும் அநேக கை வேல்களும் நீளமான
வெப்பம் நிறைந்த ஒளிபொருந்திய வேல்களும் நெருங்கின.