பக்கம் எண் :


 பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 165


 

நான்காவது

பூரணசந்திரன் அரசியற் சருக்கம்

--------

 357. அமிர்தகர னொளியின்முனி யறவுரைசென் றெறிப்பத்
      திமிரமென நின்றவினை தீர்த்தெழுந்த மதியிற்
      குமுதமென மலர்ந்துவத மாற்றுவன கொண்டே
      யமலனடி மனக்கமலத் தருக்கனில்வைத் தெழுந்தான்.

       (இ.பொ)   (முன்     சருக்கத்திற்    கூறியபடி    முனிவர்
தருமோபதேசம்   செய்த   பின்னர்)   முனி   -    அந்த  வரதர்ம
முனீஸ்வரனது, அறவுரை - தருமவசனமானது, அமிர்தகரனொளியின் -
சந்திரனது     பிரகாசத்தினால்,     (மலர்ந்த)     குமுதமென    -
அல்லிமலரைப்போல, சென்று - பத்திரமித்திரனிடஞ் சென்று, எறிப்ப -
பிரகாசிக்க,  திமிரமென  -  அந்தகாரம்போல, நின்ற  - நிலைபெற்ற,
வினை - மித்தியாத்துவ பிரகிருத வினையை, தீர்த்து - நீக்கி, எழுந்த-
உதயமாகிய,  மதியின் - அறிவினாலே,  மலர்ந்து - விளங்கி, வதம் -
விரத சீலங்களில்,ஆற்றுவன - தன் சக்திக்குத் தக்கவற்றை, கொண்டு-
கைக்கொண்டு,    மனக்கமலத்து  -  தனது ஹிருதயமாகிற தாமரைப்
புஷ்பத்தில்,  அமலன் -  மலமில்லாத சர்வக்ஞனது, அடி - பாதத்தை,
அருக்கனில் -  ஸூர்யனைப்போல,  வைத்து -  தரித்து  (ஸ்தாபித்து),
எழுந்தான் - (அப்பத்திரமித்திரன்) எழுந்திருந்தான், எ-று. (1)

 358. எழுந்துமுனி யிருகமல பாதந்தொழு தேத்திச்
     செழுங்கனக மாடமிசைச் சீயபுரம் புக்கு
     முழங்கியெழு முகிலிற்பொருண் முழுதும்வறி யோர்க்கு
     வழங்கமனத் தழுங்கியுரைத் தாளவன்றன் மாதா.

     (இ-ள்.)  எழுந்து   -   (அப்படி)  எழுந்திருந்து,   முனி   -
முனிவரனுடைய,  இரு  -  இரண்டாகிய,  கமலம் - தாமரைப்புஷ்பம்
போன்ற,  பாதம்  -  பாதங்களை,  தொழுது  -  வணங்கி,  ஏத்தி -
ஸ்தோத்திரம்   பண்ணி,  செழும்   -  செழுமைபெற்ற,   கனகம்  -
ஸ்வர்ணங்களையுடைய,  சீயபுரம்  -  சிம்மபுரத்திலுள்ள,  மாடமிசை -
தனது  உப்பரிகையில், புக்கு - அடைந்து, முழங்கி - கர்ஜித்து, எழு -
எழும்பி மழையைப்பொழிகின்ற,முகிலில் - மேகத்தைப்போல,பொருண்
முழுதும் -  தனது திரவிய முழுமையும், வறியோர்க்கு - ஏழைகளுக்கு,
வழங்க -  தியாகமாகக் கொடுக்க, அவன்தன் - அப்பத்திரமித்திரனது,
மாதா -  தாய்,  மனத்து -  மனத்தில்,  அழுங்கி -  வருத்தமடைந்து,
உரைத்தாள் - (கீழ்க்கண்டவற்றை அவனிடம்) கூறினாள், எ-று. (2)