பக்கம் எண் :


 வைசயந்தன் முத்திச்சருக்கம் 17


 

35. குழைமுகம் புரள வாங்கிக் கொடுஞ்சிலைப் புருவங் கோலி
   யழலுமிழ்ந் திலங்கும் வேற்க ணம்புகோத் தாட வாரை
   யுழையின்மென் னோக்கத்தெய்திட்டுள்ளத்தைப் பறித்துக் கொள்ளும்
   மழலையாழ் மொழியி னார்தம் வாழ்க்கையா ருரைக்க வல்லார்.

     (இ-ள்.) குழை - குண்டலமணிந்த, முகம் - முகமானது, புரள -
புரளும்    படியாக,    வாங்கி    -    வளைத்து,  கொடுஞ்சிலை -
வளைந்தவிற்போன்ற,     புருவம்    -    புருவத்தை,    கோலி  -
நெற்றியிலேறிட்டு,    அழல் - விரகாக்கினியை,    உமிழ்ந்து - கக்கி,
இலங்கும் - விளங்கும்,   வேல் - வேல்போன்ற, கண் - கண்ணாகிற,
அம்பு - பாணத்தை, கோத்து - தொடுத்து, ஆடவரை - காமுகர்களை,
உழையின் - பெட்டைமானினது,  மெல் - மிருதுவாகிய,  நோக்கத்து -
பார்வையால்,   எய்திட்டு   -   எய்து,   உள்ளத்தை   -   மனதை,
பறித்துக்கொள்ளும் - கைப்பற்றிக்கொள்கின்ற, மழலை- மழலையாகிய,
யாழ்   -  வீணையின்  கீதம்போல்  இனிமையான,  மொழியினார் -
சொல்லையுடைய  மாதர்களின்,  வாழ்க்கை  -  வாழ்வை,  உரைக்க
வல்லார்    -   சொல்லவல்லவர்கள்,   யார்  -  எவர்கள்? (உள்ள
பரிசுரைத்தலருமை என்றபடி), எ-று.

     ஆடவர் என்பது ஆடவார் என்று செய்யுள் விகாரத்தால் நீண்டு
வந்தது.                                                (35)

 36. கள்ளுமிழ்ந் திலங்கும் வாசக் கமலவாண் முகத்துக் காம
    ருள்ளமுங் கண்ணும் வண்டோ டுடன்சுழன் றாட வாடித்
    தெள்ளொலி யாழும் பாட்டுந் திருவனார் பயிலுஞ் சாலை
    புள்ளொலித் தளிகள் பாடுந் தாமரைப் பொய்கை போலும்.

     (இ-ள்.)   கள்  -  மதுவை,  உமிழ்ந்து - கக்கி,   இலங்கும் -
விளங்கும்,    வாசம்    -    வாசனை    பொருந்திய,   கமலம் -
தாமரைப்பூபோன்ற, வாள் - ஒளிபெற்ற, முகத்து - முகத்திலுண்டாகிய,
காமர் - அழகிய, கண்ணும் - நேத்திரங்களும்,  உள்ளமும் - மனதும்,
வண்டோடு - வண்டுகளுடன்,  உடன் - ஒத்து, சுழன்று - சுற்றி, ஆட
-  ஆடும்படியாக,  ஆடி - நர்த்தனங்கள் செய்து,  தெள் - தெளிந்த,
ஒலி சப்தத்தையுடைய, யாழும் - வீணையின் கீதங்களையும், பாட்டு -
கண்டத்தால்   பாடும்   பாட்டையும்,  திருவனார் - இலக்குமிபோன்ற
நர்த்தனமாதர்கள்,  பயிலும் - பழகும்,  சாலை நர்த்தன சாலையானது,
புள் - பறவைகள்,  ஒலித்து - சப்தித்து, அளிகள் - வண்டுகள், பாடும்
- பாடுகின்ற, தாமரைப் பொய்கை - தாமரைத் தடாகத்தை, போலும் -
ஒத்திருக்கும், எ-று.                                      (36)

 37. ஆனைதேர் குதிரை நிற்கு மிடம்படை யடைக்குஞ் சாலை
    சேனைமா வேந்தர் தெவ்வர் தருதிறைக் காணுஞ் சாலை