பக்கம் எண் :


436மேருமந்தர புராணம்  


 

928. அருமணி யிழந்த நாகம் போற்பல னலம்வந் தாற்றப்
     பெருகிய துயர முற்றுப் பிறவியை வெருவிப் பின்னாண்
     மருவிய பொருளும் நாடு மைந்தர்கட் கீந்து மாற்றை
     விரகினா லெறியும் வீத ராகமா முனிவ னானான்.

     (இ-ள்.)   (அவ்வாறான  பின்),   அரும் - அரிதாகிய, மணி -
சிரோமணியை,    இழந்த     -    இழந்துவிட்ட,    நாகம்போல் -
சர்ப்பத்தைப்போல,    பலன் - பல தேவனாகிய வீத பயன், ஆற்ற -
மிகவும்,     அலம்    வந்து  - சுழற்சியுற்று, பெருகிய - பெரிதாகிய,
துயரமுற்று   -  துக்கமடைந்து, பிறவியை -  இச்சம்ஸாரப் பிறப்புக்கு,
வெருவி     -    பயந்து, பின்னாள் - பிந்திய நாட்களில், மருவிய -
சோர்ந்திராநின்ற,  பொருளும் - ஐஸ்வரியமும், நாடும் - தேசத்தையும்,
மைந்தர்கட்கு - தங்கள் குமாரர்களுக்கு, ஈந்து - கொடுத்து, மாற்றை -
இச்சம்ஸாரத்தை,    விரகினால்    -    கிரமத்தினால்,    எறியும் -
கெடுக்கும்படியான, வீதராகம் - ஆசையற்ற,  மா - பெரிதாகிய குணம்
பொருந்திய,      முனிவனானான்    -   விஷயக்ஷய  வர்ஜிதனாகிய
முனிவரனாகுந் தன்மையைப் பொருந்தினான், எ-று.            (38)

929. வலம்புரி வண்ண னாரா தனையினா லுடம்பு விட்டிட்
     டிலாந்தவ கற்பம் புக்கான் யானவ னின்று வந்தேன்
     புலங்கண்மேற் புரிந்து வீந்த கேசவன் புக்க தேச
     மிலங்கிப்போய்த் தீர யானந் நரகிற்கண் டிடரை யுற்றேன்.

     (இ-ள்.) வலம்புரி   வண்ணன்    - வலம்புரிச் சங்கு போலும்
வெள்ளை வர்ணத்தையுடைய பலதேவன், ஆராதனையினால் - (ஞான,
தர்சன, சாரித்திர,    தபோ   ஆராதனையாகிய, சதுர்வித) ஆராதனா
பாவனையினால்,    உடம்பு    விட்டிட்டு  - தனது சரீரத்தை விட்டு,
இலாந்தவகற்பம் - லாந்தவகல்பத்தில், புக்கான் - அடைந்தான்,அவன்
- (அந்தப்   பலதேவனகியிருந்து இறந்து லாந்தவேந்திரனாகிப் பிறந்த
தேவனாகிய) அவன், நான் -நானே, இன்று - இப்பொழுது, (சஞ்சயந்த
பட்டாரகருடைய,    கைவல்ய   பூஜை   பரி நிர்வாண பூஜைகளைச்
செய்வதற்கு),    வந்தேன்   -    வந்தனன், (தரணேந்திரனே ! நீயும்
அதற்காகத்  தான் இவ்விடத்தில் வந்தாய்), புலங்கண் மேல் - விஷய
வாஞ்சைகளின்    மேல்,  புரிந்து - மிகவும் விரும்பி, வீந்த - இறந்து
போன,  கேசவன் - அந்த விபீஷணனென்னும் வாஸுதேவன், புக்க -
அடைந்த, தேசம் - க்ஷேத்திரமானது, இலங்கி - அவதிஜ் ஞானத்தால்
விளங்க, (அதனை அறிந்து அவனிருக்கப்பட்ட இடமாகிய), அந்நரகில்
- அந்த    நரகத்திலே,    யான் - நான், போய் - சென்று, கண்டு -
அவனைப்    பார்த்து,      தீர - அவனது நரக துக்கம் நீங்கும்படி,
இடரையுற்றேன்    -    மிகவும்   மனத்தில்   வருத்தமுற்று அவன்
சமீபமடைந்து தர்மபோதனை செய்ய வாரம்பித்தேன், எ-று.      (39)

ஒன்பதாவது :

பலதேவன் சுவர்க்கம்புக்கச் சருக்கம் முற்றிற்று.