பக்கம் எண் :


 சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 69


 

 143. எலிசென்று நாகந் தன்மே லேறிடும் நாகங் கீரி
     நலியுமென் றஞ்ச லில்லை மானமா வாலின் முள்ளைப்
     புலிசென்று வாங்கும் புல்வாய் கிடந்துழி நடுங்குமென்று
     நலிவுசெய் வேடர் செல்லார் செற்றமி னற்ற வத்தால்.

     (இ-ள்.)  செற்றம்  -  த்வேஷம்,  இல்  -  இல்லாத,  நல் -
நன்மையாகிய,  தவத்தால்  -  அத்தபஸினாலே,  எலி - எலியானது,
சென்று- போய், நாகந்தன் மேல் - ஸர்ப்பத்தின்மேல், ஏறிடும் - ஏறி
விளையாடும்,   நாகம்  -  ஸர்ப்பமானது,  கீரி  -    கீரிப்பிள்ளை,
நலியுமென்று -  வருத்துமென்று, அஞ்சலில்லை  - பயப்படுவதில்லை,
மானம்  - அபிமானமுடைய,  மா  - கவரிமிருகத்தினது,  வாலின் -
வாலில்  பற்றப்பட்ட,  முள்ளை  - முள்ளுகளை,  புலி - புலியானது,
சென்று  -  போய்,  வாங்கும் -  நீக்கிவிடும்,  புல்வாய்  -   மான்
கூட்டங்கள், கிடந்துழி - படுத்திருக்கின்ற விடங்களில், நடுங்குமென்று
-   (அவைகள்)    பயப்படுமென்று,   நலிவுசெய்  -   துன்பத்தைச்
செய்யும்படியான,  வேடர்  -  வேடர்  முதலானவர்கள்,  செல்லார் -
அடையமாட்டார்கள், எ-று.                               (3)

 144. ஒருவகைப் பட்ட வுள்ளத் திருவகைத் துறவு தன்னான்
     மருவிய குத்தி மூன்றிற் சன்னைக ணான்கு மாற்றிப்
     பொருவிலைம் பொறி செறித்துப் பொருந்தியா வாச மாறின்
     இருவகைச் செவிலித் தாய ரெழுவரைச் செறிய வைத்தான்.

     (இ-ள்.)   ஒருவகைப்பட்ட   -   ஒரேவிதமான   (அதாவது :
வேறொன்றிற்  செல்லாத),  உள்ளத்து - மனதில், இருவகை - இரண்டு
விதமாகிய,   துறவு  தன்னால்   -  (பாஹியாப்பியந்தர   பரிக்கிரகத்
தியாகமாகிய)  தபத்தினால்,  மருவிய  -  சேர்ந்த, குத்தி  மூன்றில் -
திரிகுப்திகளினால், சன்னைகள் நான்கும் - சதுஸ்ஸன்னைகளை, மாற்றி
-   நீக்கி,   பொருவில்   -    உவமையில்லாத,    ஐம்பொறி    -
பஞ்சேந்திரியங்களை,      செறித்து        -      விஷயங்களிற்
செல்லவொட்டாமற்றடுத்து, ஆவாசமாறில் - ஷடாவசியக் கிரியைகளில்,
பொருந்தி -சேர்ந்து, இருவகை - இரண்டு விதமாகிய, செவிலித்தாயர் -
புண்ணிய  பாவத்திற்குச்   செவிலித்  தாயாகியவர்களில், எழுவரை -
புண்ணியத்திற்குத்  தாயாகிய  ஏழுவிதமான பரிணாமங்களை, செறிய -
மனதில்   சேரும்படியாக,   வைத்தான்   -  தரித்தான்  (அதாவது :
சுபத்தியானத்தோ டொன்றினான்), எ-று.

     சதுஸ்ஸன்னையாவன :   ஆஹாரஸன்னை,     ஸ்த்ரீஸன்னை,
பயஸன்னை, பரிக்கிரஹ ஸன்னை என்பனவாம்.

     ஷடாவசியக்கிரியைகளாவன. -  ஸாமாயிகம்,  ஸ்துதி, வந்தனை,
பிரதிக்கிரமணம்,  பிரத்தியாக்கியானம்,  வியுத்ஸர்க்கம்  என்பனவாம்.
இவைகளின் விவரத்தை பதார்த்த சாரத்தில் பார்த்துக்கொள்க.     (4)