பக்கம் எண் :


12காஞ்சிப் புராணம்


முரிந்த வெண்டிரைக் கருங்கடல் முகட்டினைக் குழித்து
விரிந்த வெள்ளநீர் மடுப்புழிக் கரந்துடன் மேவிக்
கரிந்தி டத்தனைச் செய்ததீ வடவையின் களவைத்
தெரிந்து வில்லுமிழ் தடித்தெனத் திசைதொறுஞ் சிதறி.    4

     கடல்நீரைப் பருகும்வழி தனது வடிவை மறைத்து நீருடன் உட்புகுந்து
தன்னைக் கருகச் செய்த வடவானலத்தின் வஞ்சகச் செயலை அறிந்து
அதனை வெளியே யுமிழ்தல் போல ஒளியைக் கக்குகின்ற மின்னலாகப்
பல திசைகளிலும் வீசி,

     குழித்து-குழி செய்து (மிகப் பருகி என்னும் குறிப்பிற்று) கடற்
பள்ளங்களைக் கப்பற் செலவினர் கூறுப. உடன் மேவி-உடலில் மேவி,
உடன் மேவி எனக்கொள்க. தடித்து-மின்

கான்ற அக்கனல் மீட்டடை யாவகை கருதி
வான்ற னிற்குனி சிலையெனத் தடையினை வயக்கி
ஏன்ற நீஇனி எதிர்த்தனை யாயிடின் இன்னே
ஊன்ற னோடுயிர் குடிப்பலென் றுருமொலி எழுப்பி.    5

     உமிழப் பெற்ற தீ, மீள அணுகாத உபாயத்தை நாடி, வளைத்த
(அம்பேற்றிய) வில்லென இந்திர தனுசை வல்லென விளக்கி, மேலும்
பகைத்தனையாயின் அப்பொழுதே உயிரையும், உடலையும் ஒருங்கு
பருகுவல் என இடியொலி எழச்செய்து, (தெழித்து-உரப்பி)

     (இப்பிழை பொறுத்தனன்; இனிப்பிழை பொறேன்) வானில், ஊனொடு
எனற்பாலன தன் சாரியை பெற்றன.

அடுத்த டுத்தலை மோதுதெண் டிரைப்புனல் அளக்கர்
உடுத்த பாரில்உன் கிளையெலாம் முதலற ஒருங்கே
படுத்து நின்வலி பாற்றுவன் யானெனப் பகைமை
தொடுத்த வஞ்சினங் கொண்டழல் மேல்அமர் தொடங்கி.   6

     அடுத்து மேன்மேல் அலைத்தெழும் கடல் சூழ்புவியில் வடவைத்
தீயின் இனமாகிய நெருப்பெலாம் வேரொடும் ஒருசேர அழித்து அவ்வழி
அதன் வலிமையைப் போக்கப் பகை பற்றி எழுந்த சபதத்தொடும் போரைச்
செய்யத் தொடங்கி,

     பகை-மை பகுதிப் பொருள் விகுதி; பத்திமைபோல, சினையொடு
முதலுக்கு ஒற்றுமை உண்மையின், கிளையை யழித்து முதலின் வலிமையைக்
குறைத்தல் பேசப்பெற்றது.