பம்பை கம்பை புண்ணியநீர் மஞ்சள்நதி வேகவதிபாலி சேயா, றென்பனஏ ழுலகும்இடும் ஏழ்மாலை யெனஒழுகும் எய்துவோரைச், செம்பதுமக் கரமெடுத்து விரையநகர் விளிப்பதுபோல் தெங்கு நீளும், வம்பவிழ்பூஞ் சோலைகளும் மழைமறைத்த கதிர்போல வயங்கும் மூதூர். 23 வழிபட வருவோரைச் செந்தாமரை மலரை ஒத்த கரத்தைத் தூக்கி நகரம் விரைய அழைப்பது போலத் தெங்கு நீண்டு அசையும், மணம் விரிந்த பூஞ்சோலைகளுள் மேகம் மறைத்த சூரியனைப்போல இடைஇடையே ஒளிவிடுகின்ற பழநகர்க்கு ஏழுலகும் சாத்திய மாலை போலப் பம்மை, கம்பை, புண்ணிய நதி, மஞ்சள் நதி, வேகவதி, பாலி, சேயாறு எனப்பெறும் ஏழ் நதிகளும் ஒழுகும். ஐயிருநூற் றுயர்சாகை சாகைகளாப் படைத்திங்கண் அமர்ந்து வாழும், ஐயனே என்முதலென் றெழுகோடி மனுக்கள் உப மனுவால் யார்க்கும், ஐயமறத் தெரிவிக்கும் மறைமாவின் சாரூபம் அடைந்த போலும், ஐயநறு மாம்பொழில்கள் எஞ்ஞான்றும் கனிகளறா தமலும் ஆங்கண். 24 ஆயிரம் வேத சாகைகள் கிளைகளாகக் கிளைத்து அம்மர நிழலில் விரும்பி எழுந்தருளியிருக்கும் தலைவனே என்னுடைய தலைவனென்று ஏழுகோடி மந்திரங்களும், உப மந்திரங்களும் யாவர்க்கும் தெளிய உணர்த்தும் வேதமாமரத்தின் சாரூபத்தை, அக்கச்சியில் உள்ள அழகிய நறிய மாஞ்சோலைகள் என்றும் பழங்கள் மாறாது செறியும் ஆகலின் அம்மாமரத்தின் சாரூபத்தைச் சோலைகளும் பெற்றன போலும். ஏழுவகையான முடிபுகளைக் கொண்ட மந்திரங்கள்; நம, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வௌஷட், பட், ஹும்பட் எனவரும். விப்பிரர்கள் முதல்நால்வர் சங்கரர்நெய் தொழிலர்மயிர் வினைஞர் செக்கார், செப்பிடையர் தச்சர்கொல்லர் பொன்வினைஞர் தேவகணி கையர்கள் கூத்தர், விற்புருவப் பரத்தைமுத லோர் தெருக்கள் கலப்பின்றி வெவ்வே றாகிப், பொற்பநீண் டகன்றொ ழுங்காய் மதிக்கணிசெய் கதிர்களெனப் பொலியும் ஆங்கண். 25 பிராமணர், முதலிய நான்கு வருணத்தவரும், அனுலோமர் முதலிய கலப்பினரும், தறி நெய்வோரும், நாவிதரும், செக்காரும் (எண்ணெய் வாணிகர்) பேசப்படுகிற ஆயரும், தச்சரும், கொல்லரும், பொற்கொல்லரும் (தட்டார்), தேவகணிகையரும், கூத்தரும், வில்லை ஒத்த புருவத்தையுடைய பரத்தையர் முதலானோரும் வாழ்தற்கிடனாகிய தெருக்கள் ஒன்றொடொன்று தலை மயங்காது வெவ்வேறாய் அழகுற நீண்டு அகன்று ஒழுங்குபட்டுச் சந்திரனுக்கு அழகுசெய் கதிர்களேபோல அவ்விடத்துப் பொலிவுறும். |