|      இப்படிச் சதுர்யுகம் ஆயிரம் திரும்பினால், பிரமாவுக்கு ஒரு பகலாகும்;    பின்னும் ஆயிரந் திரும்பினால் பிரமாவுக்கு ஓரிராத்திரியாகும். ஆகவே
 இரண்டாயிரஞ் சதுர்யுகங் கொண்டது பிரமாவுக்கு ஒருநாளெனப்படும். இந்த
 நாள் முப்பது கொண்டது ஒருமாசம். இந்த மாசம் பன்னிரண்டு கொண்டது
 ஒருவருஷம். இந்த வருஷம் நூறானால், பிரமாவுக்கு ஆயுசு முடியும்.
 இவ்வியல்புடைய பிரமாக்கள் எண்ணில்லாதவர்கள் பிறந்திறந்தார்கள்.
 பிரமாவினுடைய ஆயுசு பரமெனப் பெயர் பெறும். அதிற் பாதியாகிய
 ஐம்பது வருஷம் பரார்த்தமென்று சொல்லப்படும்.
      பிரமாவினுடைய பகலாகிய ஆயிரஞ் சதுர்யுகத்தி்லே பதினான்கு     மநுக்கள் அதிகாரம் பண்ணுவார்கள். அவர்கள் பெயர்:- சுவாயம்புவர்,
 சுவாரோசிஷர், ஒளத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர்,
 சூரியசாவர்ணி, தக்ஷசாவர்ணி, பிரமசாவர்ணி, தருமசாவர்ணி, ருத்திரசாவர்ணி,
 ரோச்சியர், பாவியர் என்பவைகளாம். ஒவ்வொரு மநுவந்தரத்துக்கு
 எழுபத்தொரு சதுர்யுகமாகும். எழுபத்தொரு சதுர்யுகம், தேவமானத்தினாலே
 எட்டு லக்ஷத்தைம்பத்தீராயிரம் வருஷங்களாம். மனுஷ்யமானத்தினாலே
 முப்பதுகோடியே அறுபத்தேழு லக்ஷத்திருபதினாயிரம் வருஷங்களாம்.
 ஒருமநுவந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகப் பதினான்கு
 மநுவந்தரத்துக்கும் தொளாயிரத்துத் தொண்ணூற்றுநான்கு சதுர்யுகமாகும்.
 பிரமாவின் பகலிலே மிஞ்சிய சதுர்யுகம் ஆறு.
      இவ்வாறு பதினான்கு மநுவந்தரங்களானால், பிரமாவுக்கு ஒரு     பகலாம். இதன் முடிவிலே தினப்பிரளயம் உண்டாகும். அப்பொழுது பிரமா
 அப்பகலளவினதாகிய இராத்திரியிலே யோகநித்திரை செய்வர். இப்படி
 ஆயிரஞ் சதுர்யுகவளவையையுடைய இராத்திரி கடந்தபின்பு பிரமாவுக்கு
 ஒருபகல் ஒருகற்பமெனப்படும். கற்பமாவது சிருட்டிமுதற் பிரளயமிறுதியாகிய
 காலம். ஒருகற்பத்துக்கு மனுஷவருஷம் நானூற்று முப்பத்திரண்டுகோடி.
      பிரமாவினுடைய ஒருபகலிலே பதினான்கிந்திரர்கள் இறப்பர்கள்.    ஒருமாசத்திலே நானூற்றிருபதிந்திரர்கள் இறப்பர்கள். ஒரு வருஷத்திலே
 ஐயாயிரத்து நாற்பதிந்திரர்கள் இறப்பர்கள். பிரமாவுடைய ஆயுளளவையிலே
 ஐந்துலக்ஷத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் இறப்பர்.
      தற்காலத்தில் இருக்கின்ற பிரமாவுக்கு முதற்பரார்த்தமாகிய ஐம்பது    வயசுஞ்சென்றன. இப்போது நடப்பது இரண்டாம் பரார்த்தத்தில் முதல்
 வருஷத்து முதன்மாசத்து முதற்றினம். இது சுவேதவராக  கற்பமெனப்படும்.
 பிரளயசலத்தில் முழுகியிருந்த பூமியை வி்ஷ்ணு வெள்ளைப்பன்றி யுருவங்
 கொண்டு மேலே எடுத்த கற்பமாதலிற் சுவேதவ ராககற்பமெனப்பட்டது.
 இத்தினத்திலே சுவாயம்புவமநு, சுவாரோகிஷமநு, ஒளத்தமமநு, தாமசமநு,
 ரைவதமநு, சாக்ஷுஷமநு என்னும்
 |