என்றும் நிலைமாறாத தரும தேவதையை ஒப்ப அடியேனும் விடையாகித் தாங்க அருள்பாலித்த எனது பெருமானே! உமையம்மையார் வெகுளாது மகிழ்ச்சி கொள்ள என்னைத் தேவியாகக் கொண்டு நின் இடப்பாகத்தில் இருத்திய குணமலையே! நின் திருவடிகளுக்கு வணக்கம். திருமால் விடையாதல் (தழுவக். 79). திக்காடை யாதி அணியோடு தீவினையேன் அக்கோடு கண்ணோ டுரிஎன் பணிந்தானே இக்காய் மழுமுதலாம் வான்படையோ டென்றனையும் தக்கோர் புகழ்கணையாக் கொண்டாய் சரண்போற்றி. 19 | திசையாகிய உடை முதலிய அணிகளோடு தீவினையேன் பன்றிக் கொம்பையும், மீன்விழி எலும்பையும், ஆமை ஓட்டினையும், நரசிங்கத்தின் தோலையும், முழு எலும்பையும்,அணியாகக் கொண்டோனே! வெகுண்டு அழிக்கின்ற மழு முதலாம் பெரும்படையோடு என்னையும், தக்கோர் யாவரும் புகழ்கின்ற அம்பாகக்கொண்டோனே! நின்திருவடிகளுக்கு வணக்கம். அழகு செய்தலும், அணிதலும் கருதி ஆடையை அணி என்றார். நலம் செய்து, செருக்கினமையால் தீவினையேன், மீன் கண்; ‘மாய மீன்விழி பறித்தவன்’ (வலம்.24). திகம்பரன்-நக்கன், இருபெயரும் நிருவாணன் என்னும் பொருள் தரும். பிட்சாடனர் கோலம் நோக்குக. எலும் பணிதல்; ‘‘கங்காளம் (முழு எலும்பு) ஆமா கேள் காலாந்தரத் திருவர், தங்காலம் காணத் தரித்தனன் காண்சாழலோ’ (திருவா. சாழல்) மெய்யடியார் சாத்தும் விரைமலர் போல் அன்பிலாப் பொய்யடியேன் ஊன்விழியுங் கொண்டருளும் பொன்னடியாய் செய்யானே நந்தி கணத்தவர்போல் சேயேனும் எய்திஅருட் கூத்தின் இயமுழக்கும் பேறளித்தோய். 20 | உண்மை அன்பர் சாத்துகின்ற வாசனை வீசுகின்ற மலரை ஒப்பப் பொய்யன்பினனது இழிந்த விழியையும் கொண்டருளும் பொன்போலுயர்ந்த திருவடியினனே. செம்பொருளே! நந்தி கணநாதர் போலன்றிப் பத்திக்கு நெடுந்தொலைவினனாகிய யானும் அணுகித் திருவருள் செய்கின்ற திருநடனத்திற்கு மத்தள முழக்கும் பேற்றினை அளித்தவனே. திருமால் மத்தள முழக்கல்; மத்தள மாதவேச வரலாற்றினும் (தழுவக்குழைந்த படலம்). விழியிடந்தருச்சித்தல்; திருமாற் பேற்றுப் படலத்தினும் காண்க. ஆலம் அளக்கர்எழும் அந்நாள் அடைக்கலமென் றோலமிடும் எங்கட் குயிரளித்த சீராளா காலமே காலங் கடந்த பெருங்கருணைக் கோலமே ஆனந்தக் குன்றே அடிபோற்றி. 21 | திருப்பாற்கடலில் விடமெழுந்த அந்நாளில் உன்திருவடிக்கு அடைக்கலம் என்று சரண்புகுந்து ஓலமென்று முறையிடும் எங்களுக்குயிரை நல்கிய கண்ணோட்ட முடைய கருணையாளனே! காலதத்துவமே! காலாதீத வடிவினனே! ஆனந்த மலையே அடிக்குப் போற்றி! |