பக்கம் எண் :


448காஞ்சிப் புராணம்


நிறைபெருங் காதல் கூர ஆயிடை நியமம் பூண்டு
மிறைவழி இகந்து பாசு பதத்தனி விரதம் ஆற்றி
முறைபெறு வெண்ணீ றங்கம் முழுவதும் பொதிந்து பாசப்
பொறைதவிர்த் தருளும் மும்மைப் புண்டரம் நுதலில் தீட்டி,  6

     நிறைந்த பேரன்பு மேலும் பெருக அங்கண் நியமம் மேற்கொண்டு
குற்றமுடைய ஐம்பொறிகளை அடக்கிப் பசுபதியை அடைதற்குரிய பாசுபத
விரதத்தைக் கைக்கொண்டு முறையாற்பெற்ற திருவெண்ணீற்றைத் திருமேனி
முழுவதும் பூசிப் பாசச் சுமையைத் தவிர்த்தருளும் முப்புண்டரம் நெற்றியிற்
றீட்டி,

     விபூதி சேகரித்தல் சிவதருமோத்தரம், சைவசமய நெறி முதலியவற்றுட்
காண்க. பாசப் பொறை-உடம்பு; பிறவி நோய்.

கண்டிகை மாலை பூண்டு கதிர்ஒளி பரப்பும் ஆழித்
திண்படை பெறுதல் வேண்டிச் சங்கற்பஞ் செய்துகொண்டு
விண்டலத் திமையோர் அங்கண் வேண்டுவ எடுத்து நல்க
மண்டுபே ரன்பாற் பூசை விதியுளி வழாது செய்வான்.     7

     உருத்திராக்க வடம் பூண்டு ஒளிக் கதிரை விரிக்கும் சக்கரமாகிய
திண்ணிய படையைப் பெற விரும்பிச் சங்கற்பஞ் செய்துகொண்டு தேவர்கள்
வேண்டும் உபகரணங்களை எடுத்தன்பொடும் கொடுக்கச் செறிந்த
பேரன்பினொடும் பூசனையை முறைப்படி வழுவாமற் செய்து வருவார்.

     சங்கற்பம்-இதுவேண்டி இது செய்வல் எனக்கருத்து வாய்த்தல்.

மாயிருங் கமலப் போது கைக்கொண்டு மாட்சி சான்ற
ஆயிரந் திருநா மத்தான் நித்தலும் அருச்சித் தேத்தி
மேயினன் திருமால் அன்னோன் பத்தியின் விளைவு காண்பான்
பாயிர மறைகள் தேறாப் பரம்பொருள் ஒருநாள் அங்கண்.     8

     தாமரையின் மிகப்பெரு மலர்களைக் கொண்டு சிறப்பு நிரம்பிய
ஆயிரந் திருநாமங்களால் நாடொறும் அருச்சனை புரிந்து புகழ்ந்து விரும்பி
யுறைந்தனர் திருமால். அவர் தம் பேரன்பின் நிகழ்ச்சியைக் காட்டும்
பொருட்டுப் பாயிரத்தோடு கூடிய மறைகளால் தெளியப்படாத பரம்பொருள்
ஓர் நாள் அந்நிகழ்ச்சியில்,

மேற்படி வேறு

     நறைவாரும் இதழ்துறுத்த செழும்பொகுட்டு நளினம்ஆ யிரத்தில்
ஒன்று, மறைவாகத் திருஉள்ளம் வைத்தருளக் கருவிமுகில் வாட்டு
மேனி, இறையோனும் பண்டுபோல் பவன்முதலாம் ஆயிரம்பேர்
எடுத்துக் கூறிக், குறையாத பேரன்பிற் பதுமமலர் கொடுபூசை புரியும்
ஏல்வை.                                                9