பக்கம் எண் :


கண்ணேசப் படலம் 525


     காஞ்சியை எய்தி அன்பொடும் விரும்பிக் கண்ணலிங்கேசப் பிரானை
இருத்திப் புகழ்ந்து போற்றினர். பசிய மெல்லிய கொடியாகிய உமையம்மை
கூறனார் கருணை மிக்கு விருப்பம் யா ததனைக் கூறுதி என்ற போது,

குமுத வாய்ப்பசுங் கோமளை கூறநீ
இமிழ்தி ரைக்கடல் வெவ்விடம் என்பொருட்
டமுது செய்தனை அங்கதன் முன்னம்அத்
திமிர நஞ்சஞ் சிறிதெனைத் தாக்கலால்           4

     செவ்வல்லி மலரை யொக்கும் திருவாயையுடைய கொழுந்தாகிய
கோமளையின் பங்கனே! நீ அலை ஒலிக்கின்ற கடலிற் தோன்றிய கொடிய
விடத்தை என்பொருட்டமுதாக உட்கொள்ளு முன்பே இருள் நிறமுடைய
விடம் சிறி தென்னைத் தாக்குதலால்,

மேனி முற்றுங் கருகி வெதும்பினேன்
யானி னிப்படும் வெப்பிது ஆற்றலேன்
கானி லாய கடுக்கைத் தொடையொடு
தூநி லாப்பிறை சுற்றிய மோலியாய்.              5

     மேனி முழுதும் கரிந்து வெப்ப மடைந்தேன். யான் இனி இத்துன்பம்
பொறேன். மணங்கமழும் கொன்றை மாலையையும், தூய பிறையையும்
முடித்த முடியுடையோனே!

பங்கம் நீக்கி நலந்தரு பான்மையாற்
சங்க ரன்சிவன் சம்பு உருத்திரப்
புங்க வன்என நாமங்கள் பூண்டனை
அங்க ணாஅடி யேன்உன் அடைக்கலம்.          6

     ‘பரிபாவத்தை நீக்கி நலஞ்செய்யும் தன்மையால் சங்கரன், சிவன்
சம்பு, உருத்திரன் என்னும் திருப்பெயர்கள் அழகுறத் தாங்கினை. அழகிய
கண்ணோட்ட முடையவனே! முதல்வனே! அடியனேன் உன்பால் அடைக்கலம்
புக்கேன்.

என்று மாயன் இரந்திது வேண்டலும்
கொன்றை மாலைக் குழகன் இரங்கினான்
மன்ற லந்துணர் வாசத் துளவினோய்
ஒன்று கேட்டி உனக்கிது வேண்டுமேல்.           7

     என்று திருமால் குறையிரத்தலும் என்று மூவாத இளையராகிய
பெருமானார் இரங்கி மணங்கமழ் கொத்துக்களையுடைய துளவ மாலையனே!
உனக்கிக் குறை தீரவேண்டுமாயின், அதற்குரிய ஒன்றனைக்கேள்.