சிவபெருமான், பிரமன் முதலாக வலிமை அமைந்த மரங்கள் ஈறாகிய அண்டத்தை இடனாகக் கொண்டுள்ள எழுவகைப் பல்லுயிர்களையும் பிரசண்ட மாருதம்போல வேகமாக எடுத்தெடுத்து நெய்யாற் பொலிவுறும் அழகிய குண்டத்தில் புனிதப்படுத்திச் செழுவிய நெருப்பிடை யிட்டனர். மேற்படி வேறு மடுப்ப மடுப்ப மீதெழுந்து வயங்கிச் சுடருந் தழற்பிழம்பில் அடுப்ப நனைக்கும் புறத்தெண்ணீர் அண்ட முகடு வேவாமைத் தடுத்த தாகும் அன்றாயின் மன்ற நிறையுஞ் சராசரங்கள் உடுத்த மேலைச் சுவர்த்தலமும் உருகிக் கவிழும் உலகன்றே. 17 | இடுந்தொறும் மேன்மேலெழுந்து விளங்கும் நெருப்பினால் அண்டத்தின் உச்சி வெந்தொழியாதவாறு அண்டத்தின் மேல் நீர் தடுத்தது ஆகும். இல்லையேல், அண்டமுகடு நிச்சயமாக உருகி மேலுலகம் குப்புறக் கவிழ்ந்திருக்கும். மேற்படி வேறு இவ்வகை வடிவு முற்றும் இணர்எரிப் பிழம்பு ளாக்கிக் கௌவையில் காலச் செந்தீப் பிரான்முதல் கணங்கள் தாமும் எவ்வம்இன் றொளிருந் தன்னோ டேகமாய்ச் சேர்த்துப் பின்னர் அவ்விடை விரவும் பண்டா சுரனையும் அழலிற் பெய்தான். 18 | இவ்வாறு சராசர வடிவங்கள் அனைத்தினையும் பல சிகைகளையுடைய தீப்பிழம்பிற் சேர்த்துத் துன்பமில்லாத காலாக்கினி உருத்திரர் முதலாக உள்ள கணங்களையும் துன்பம் இல்லையாகச் சுடர்விடும் தன்னுடன் ஒன்றுபட ஆக்கிப் பின்பு அவற்றிடை விரவி யிருந்து தனி நின்ற பண்டாசுரனையும் வேள்வித்தீயில் இட்டனர். எண்ணரும் உயிர்க ளெல்லாம் எரியகத் தொடுங்கி நாளும் கண்வளர் காலத் தெய்தும் இன்பத்திற் களித்து வாழ்ந்த அண்ணுதற் கரிய அத்தீ அன்றுதொட் டிலிங்க மாகிப் புண்ணிய மயான லிங்க எனப்பெயர் பொலிவுற் றன்றே. 19 | அளவுட்படாத உயிர்க் குழாம் முழுதும் வேள்வித்தீயில் அடங்கி நாடொறும் துயிலும் காலத் தெய்தும் இன்பமே பெற்றுக் களித்திருந்தன. அணுகுதற்கு இயலாத அந்தத் தீ அந் நாள் முதலாகச் சிவலிங்க வடிவமாகப் புண்ணிய மயானலிங்கம் என்னும் பெயரொடு விளங்கும். அத்தகை இலிங்கந் தன்னில் அளப்பருங் கருணை பூத்துப் பைத்தபாப் பல்குற் செவ்வாய்ப் பனிவரை அணங்கி னோடுந் தத்துநீர் வேணிப் பெம்மான் றன்னடி யிணைக்கீழ்ச் சிந்தை வைத்தவர்க் கிருமைப் பேறும் வழங்கிவீற் றிருக்கும் மன்னோ. 20 | |